மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 24ம் தேதியன்று, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 24ம் தேதியன்று அம்மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிவபெருமானை தரிசனம் செய்தால் , வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும், வாழ்க்கையில் முன்னேற்றத்துடனும் இருக்கலாம் என்பது ஜதீகம்.
எனவே சிவராத்திரியன்று, சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவைச் சுற்றி அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஒன்றாக ஓடி சென்று வழிபட்டு சிவராத்திரியை கொண்டாடுகின்றனர்.
குமரி மாவட்டம் முஞ்சிறை அருகே அமைந்துள்ள திருமலை மகாதேவர் கோயில் இருந்து ஓட்டம் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிப்பட்ட பின்னர் திருநட்டாலம் சசங்கரநாராயணர் கோயிலில் இந்த ஓட்டம் நிறைவு பெறுகிறது.
நாளை மாலை இந்த ஓட்டம் தொடங்குகிறது. ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கையில் விசிறி, திருநீற்று பையுடன் கோபாலா- கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடுவர். மேலும் கார் மற்றும் வாகனங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 12 சிவன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.