19ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... 3 தொகுதிகளுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு
வரும் 19ம் தேதி 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சியான திமுகவும் அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தன.
கடந்த 17ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படைகள் தொகுதியின் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று, இந்த 3 தொகுதிகளுக்கும் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 19ம் தேதி இந்த 3 தொகுதிகளிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும், இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய தேர்தல் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ரத்து செய்யப்பட்டது. நிறுத்தப்பட்ட தேர்தலை வரும் 19ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அங்கு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேலு மரணமடைந்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.