ஆயுதபூஜை முதல் காந்தி ஜெயந்தி வரை விடுமுறை: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை: ஆயுதபூஜை தொடங்கி விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம், காந்திஜெயந்தி என செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர்2ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாகும்.
பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களும் தொடர் விடுமுறை விட்டுள்ளனர். விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பலரும் திட்டமிட்டுள்ளனர்.
வெளியூர் செல்லும் பயணிகளால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலை மோதுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுதபூஜையை முன்னிட்டு தற்காலிக கடைகள் முளைத்துள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே பேருந்துகள், ஆட்டோ, கால்டாக்ஷிகள் நத்தை போல நகர்ந்து செல்கின்றன. எனவே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் விரைவாக முன்கூட்டியே ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.