பிய்த்து எடுக்கும் பருவ மழை.. விடுமுறையால் பள்ளிக் குழந்தைகள் ஜாலி!
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இரு மாவட்ட பள்ளிக்குழந்தைகள் குஷியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்டங்களின் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பில்லூர் நிரம்பியது
குறிப்பாக கனமழையினால் கோவை மாவட்டம், பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என கருதி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவு முழுவதும் மழை
நேற்று இரவுமுழுவதும் மழை வெளுத்து கட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்கள் இயல்பு நிலை
மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊட்டி, குன்னூர்
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது