4 நாட்கள் தொடர் விடுமுறை.. கோயம்பேட்டில் மக்கள் நெரிசல்.. 980 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை : நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் வெளியூர்களுக்கு படையெடுப்பதால், சென்னை-கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்களை அரசு இயங்குகிறது.
நாளை 12 மற்றும் 13 ஆகியவை சனி, ஞாயிறு விடுமுறைதினங்கள். இது 2வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு கட்டாயவிடுமுறை உள்ளது.
அதேபோல, 14ம் தேதி திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ல் சுதந்திர தினம் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் வருகிறது. இதையொட்டி, சென்னையில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கின்றனர்.
ரயில்களில் டிக்கெட் தீர்ந்து விட்டதால் ஏராளமானோர் ஆம்னிபேருந்துகளில் டிக்கெட் எடுத்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏசி பஸ்களில் ரூ.780ல் இருந்து அதிகபட்சம் ரூ.1900 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் பயணிகள்.
கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேட்டிலிருந்து அரசு சிறப்பு பஸ்களை இயங்குகிறது. மொத்தம் 980 பஸ்கள் சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயங்கப்படுகிறது. மாலை 5 மணி முதலே கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.