சென்னையில் களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்
சென்னை: வட இந்தியர்களின் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ஹோலி. விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் போது வண்ணப் பொடிகளைத் தூவி மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
சென்னையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சவுகார்பேட்டை, யானைக்கவுனி, வேப்பேரி, புரசைவாக்கம் போன்ற இடங்களில் ‘ஹோலி' பண்டிகை உற்சாகம் கரை புரண்டு ஓடியது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், தண்ணீரில் வண்ண நிறங்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெரினா கடற்கரையில் சில வடநாட்டு இளைஞர்கள் அங்கு வந்த தமிழக இளைஞர்கள் மீது வண்ண பொடிகளை பூசினர். வடநாட்டு பண்டிகையாக இருந்தாலும் தமிழக இளைஞர்களும் அவர்களுடன் இணைந்து வண்ண பொடிகளை பூசி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பின்னர், குழுவாக நின்று ‘செல்பி' எடுத்துக்கொண்டனர்.