தை அமாவாசை: ராமேஸ்வரம், வேதாரண்யத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் தை,ஆடி அமாவாசை நாள்களில் புனித நீராடும் மக்கள்,தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.
ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாளில் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. இதில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீர்நிலைகளில் புனித நீராட திரளான மக்கள் குவிந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில்…
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடுகின்றனர்.
தை அமாவாசை தினமான இன்று இந்தியாமுழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
புனித தீர்த்தங்களில்…
தைஅமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித ஸ்தலங்களான திருப்புல்லாணி, தேவி பட்டினம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் இறைவனை வழிபட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப் பணம் கொடுத்தனர்.
கன்னியாகுமரியில்
இதேபோல் முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர்.
திருச்செந்தூரில் நீராடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேதாரண்யத்தில்…
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு எள்ளும், அரிசியும் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.
குற்றாலத்தில்…
குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குறைவாக விழும் தண்ணீரில் குளித்து முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் செய்து வழிபட்டனர்.