தொழில் அதிபரின் மனைவி கழுத்து அறுத்து கொலை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் சிக்கினான்
சென்னை: சென்னை, சூளையில், தொழில் அதிபரின் மனைவியை கழுத்து அறுத்து, கொடூரமாக செய்த கொலையாளிகள், கிலோ கணக்கில் நகைகளை கொள்ளைஅடித்து, சென்றனர்.கொள்ளையனின் உருவம் சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வேப்பேரி அடுத்துள்ள, சூளை காளத்தியப்பா தெருவை சேர்ந்தவர் ஹேம்ராஜ் ஜெயின். தொழில் அதிபரான அவர், சவுகார்பேட்டையில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மஞ்சு, 48; மகள் பூஜா, 21; மகன் ஆசிஷ் குஞ்ச், 23. நான்கு பேரும், இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் வசித்தனர்.
கீழ் தளத்தில், கார் நிறுத்தம் மற்றும் கிடங்கு உள்ளது. நேற்று காலை, ஹேம்ராஜ் கடைக்கு சென்றுவிட்டார், பூஜா, கல்லுாரிக்கு சென்றுவிட்டார்ர். ஆசிஷ் வீட்டில் இல்லை. மஞ்சு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை, 4:30 மணிக்கு, ஹேம்ராஜ் ஜெயின் வீட்டிற்கு, கரப்பான் பூச்சி மருந்து அடிக்க இருவர் வந்தனர். அவர்கள், மாலை 5:30 மணிக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாலை, 6:50 மணிக்கு, கல்லுாரியில் இருந்து பூஜா வீடு திரும்பினார். கதவு வெளிப்புறம் பூட்டிக்கிடந்தது. உள்ளே, தொலைக்காட்சி பெட்டி, அளவுக்கு அதிமாக அலறியது. காலிங்பெல்லை பலமுறை அழுத்தியும், உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும், ஒன்றும் தெரியவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த பூஜா, சகோதரர் ஆசிஷுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும், பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது, ஒரு அறையில், தாய் மஞ்சு, கழுத்து அறுத்து, கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். வீடு முழுவதும் ரத்த ஆறாக கிடந்தது. அதை பார்த்ததும், பூஜா அங்கேயே மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து வந்த ஹேம்ராஜ் ஜெயின் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து, கதறி அழுதார். தகவல் அறிந்து வேப்பேரி போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மஞ்சுவை கொன்றவர்கள், டிரெஸ்சிங் அறையில் இருந்த, ஒரு கிலோவுக்கும் மேலான நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொல்லப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் தான், மஞ்சு, அங்குள்ள மளிகை கடைக்கு சென்று திரும்பியுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரை கொன்றுவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. விசாரணையின் போது எதிரே உள்ள பள்ளியில் ரகசிய கேமரா பொருத்தி இருப்பதை அறிந்து அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடைவெளியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவன் வீட்டுக்குள் நுழைவதும் பின்னர் அவன் ஒரு பையுடன் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதும் தெரிய வந்தது.
எனவே, இந்த கொலை, கொள்ளை திட்டமிட்டு நடந்து இருக்கலாம். வீட்டில் மஞ்சு தவிர யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஒருவன் இந்த கொலையை செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையன் இதே பகுதியை சேர்ந்தவனாகவோ அல்லது, அந்த வீட்டைப் பற்றி நன்கு அறிந்தவனாகவோ இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கேமராவில் பதிந்திருந்த உருவத்தை கொண்டு அவனை தேடி வருகிறார்கள். வீட்டில் பூச்சி மருந்து அடித்தது ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஹேம்ராஜ் ஜெயின் உறவினர் சந்த்குமார் கூறுகையில்,''நகைகள் பீரோவில் வைக்கப்படவில்லை. ஹால், அதை அடுத்து பெட்ரூம், அதையும் தாண்டியுள்ள, டிரெஸ்சிங் ரூமில் தான் வைத்து இருந்துள்ளனர். அங்கு இருந்துதான் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதனால், நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என, சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.