செக்போஸ்ட் ரூமுக்குள் ஏட்டய்யா "சேட்டை".. கொந்தளித்த மக்கள்.. மாணவன் மீட்பு!
களியக்காவிளை செக்போஸ்ட்டில் தலைமைக் காவலர் ஒருவர் மாணவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டார்.
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் மாணவனை வலியுறுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போலீஸ் தலைமைக் காவலர் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டார்.
பளுகல் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில்தான் இந்த அக்கிரமம் நடந்தது. அங்கு காவலுக்கு இருந்தவர் தலைமைக் காவலர் சேவியர். அந்த வழியாக நடந்து போன 9வது படிக்கும் மாணவனை கூப்பிட்ட அவர் சோதனைச் சாவடிக்குள்ள உள்ள அறைக்குக் கூட்டிச் சென்று கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வன்புணர்ச்சியில் ஈடுபட முயன்றார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவனின் தந்தை தனது மகனை ஏட்டு உள்ளே கூட்டிச் சென்றதைப் பார்த்து விரைந்து வந்தார். அறை பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அவர் சேவியரின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார்.
பொதுமக்கள் திரண்டு விட்டனர். சேவியரை சிலர் சரமாரியாக அடித்தனர். தகவல் அறிந்து வந்து போலீஸார் சேவியரை மீட்டனர். மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தந்தையின் புகாரின் பேரில் பின்னர் சேவியர் கைது செய்யப்பட்டார்.