இன்னும் எத்தனை கெளசல்யாக்கள், அம்ருதாக்கள்.. தேவை நிரந்தர தீர்வு.. கடும் தண்டனை!
Recommended Video
சென்னை : ஜாதி ரீதியிலான ஆணவக் கொலைகள் தடுக்க கடும் தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே மேலும் கௌசல்யாக்களும் அம்ருதாக்களும் நிர்கதியாய் நிற்பதை தடுக்க முடியும்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவர் கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் தன் மகள் வேற்று ஜாதிக்காரரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கௌசல்யாவின் தந்தை உள்ளிட்டோர் கூலிப்படையை ஏவி கடந்த மார்ச் 13, 2016-ஆம் ஆண்டு படுகொலை செய்தனர்.
இந்த ஆணவக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கௌசல்யா தனி ஆளாக போராடியதன் விளைவாக கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவிலும் ஆணவக் கொலை
தன் தந்தையானாலும் தன் கணவனை கொன்ற காரணத்துக்காக சட்டபடி நீதியை நிலைநாட்டியதற்காக கௌசல்யாவை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் உடுமலைபேட்டையை போல் தெலுங்கானாவிலும் இதுபோன்ற ஆணவக் கொலை நிகழ்ந்தது.
பிரணாய் குமார் கொலை
அம்ருதாவும் பிரணாய் குமாரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதை அம்ருதாவின் தந்தையால் ஜீரணிக்கவே முடியவில்லை. காரணம், அவர் கீழ் ஜாதியை சேர்ந்தவர். எனவே தன் மகள் என்றும் பாராமல் அவரது கணவரை நடுரோட்டில் வெட்டிச் சாய்த்துள்ளார்.
படுகொலை
இதையடுத்து பிரணாய் குமாரின் வீட்டில் தங்கியுள்ள அம்ருதாவை கௌசல்யா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் எப்படி போராடுவது என்பது குறித்தும் விளக்கினார். சங்கர் படுகொலை வீடியோவை அம்ருதாவிடம் காண்பித்தார்.
கண்ணை மறைத்தது ஜாதி
இந்த நவீன யுகத்தில் இதுபோல் ஜாதிக்காக கொலைகள் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. அனைத்து ஜாதியினரின் ரத்தமும் சிவப்பே என்பதை மறந்துவிட்டு இது கொன்றதால் தங்கள் அன்புமகளின் வாழ்க்கை நிர்கதியாய் நிற்பாரே என்ற கவலை துளிக் கூட இல்லாமல் கண்ணுக்கு தெரியாத ஜாதி இவர்களின் கண்ணை மறைத்துவிட்டது. பிடிக்காவிட்டால் ஒதுக்கி வைத்து விடுங்கள். காதலித்தது பாவமா. அதற்காக சங்கருக்கும் பிரணாய்குமாருக்கும் இத்தகைய கொடூர தண்டனை கொடுத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
நிரந்தர தீர்வு
கவுசல்யா மற்றும் அம்ருதாவின் தந்தைகளுக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற ஆணவக் கொலைகளை செய்வோருக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற கொலைகள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். இன்னும் கௌசல்யாக்களோ அம்ருதாக்களோ மீண்டும் உருவாகக் கூடாது. ஆணவக் கொலைகளுக்கு என்ட் கார்டு அவசியம்.