திருப்பூர் சங்கர் படுகொலை வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் சங்கர்-கவுசல்யா தம்பதி. வெவ்றேறு ஜாதியை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 13-ந் தேதி சங்கர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தாக்குதலில் பலத்த காயத்துடன் கவுசல்யா உயிர்தப்பினார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, கவுசல்யாவின் பெற்றோர் சின்னசாமி-அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டி உட்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், நீதிபதி அலமேலு நடராஜன் விடுமுறையில் இருப்பதால், வரும் 22-ந் தேதியன்று அவர்களை ஆஜர்படுத்துமாறு கூடுதல் நீதிபதி யமுனா உத்தரவிட்டார்.