முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற பெருமையை அடைவேன்: பிரித்திகா யாஷினி நம்பிக்கை
சென்னை: நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற தகுதியை பெறுவேன் என, நம்பிக்கையுடன் கூறியுள்ளார் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி திறன் போட்டியில் பங்கேற்ற பிரித்திகா யாஷினி.
தமிழக காவல்துறையில், 1,078 சப் - இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய, மே, 23, 24ம் தேதிகளில், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில், 5,000 பேர், வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, தமிழகம் முழுவதும், 11 மையங்களில் உடல்தகுதி மற்றும் உடல்திறன் போட்டி நடக்கிறது.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், ஆகஸ்ட் 3ம்தேதி, பொது பிரிவைச் சேர்ந்த ஆண்கள், 632 பேருக்கு, உயரம் அளத்தல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயமும் நடந்தன. அந்த தூரத்தை அவர்கள், ஏழு நிமிடங்களில் கடந்தனர்.
புதுமணப் பெண்கள் பங்கேற்பு
செவ்வாய்கிழமை பொதுப்பிரிவு பெண்களுக்கு, உயரம் அளத்தல் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தன. காலை, 6:00 மணி முதல் காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், பொதுப்பிரிவு பெண்கள் என, 766 பேர் பங்கேற்றனர். இதில் புது மணப் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள்
சில பெண்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள், தங்களின் கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, 'அம்மா ஜெயிச்சுட்டு வர்றேன் செல்லம்' என, கொஞ்சி மகிழ்ந்து, ஓட்டப் பந்தயத்திற்கு சென்றனர்.
ஓடி ஓடி விளையாடு...
காவல் துறையைச் சேர்ந்த பெண்களும், இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை அவர்கள், விதிமுறைகளின் படி, இரண்டரை நிமிடங்களில் கடந்தனர்.
நேர்முகத்தேர்வு
காவல் துறையைச் சேர்ந்த ஆண்களுக்கு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. அந்த தூரத்தை, ஏழு நிமிடங்களில் கடந்தனர். ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்ற ஆண் மற்றும் பெண் காவலர்கள், நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுவிடுவர்.
போட்டியில் வெளியேறியவர்கள்
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், 170 செ.மீ., பெண்கள், 159 செ.மீ., உயரமும்; தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியின ஆண்கள், 167 செ.மீ., பெண்கள், 157 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். அதில், ஒரு செ.மீ., குறைந்தவர்கள் கூட, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முதல் திருநங்கை
போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற, திருநங்கை பிரித்திகா யாஷினியும், நேற்று காலை, 6:00 மணியில் இருந்தே, ஸ்டேடியம் முன் போட்டிக்கு தயார் நிலையில் இருந்தார்.ஆனால், அவரது அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லை என்பதால், சில மணிநேரம் காக்க வைக்கப்பட்டார். பின்னர் உடனடியாக, புகைப்படம் எடுக்கப்பட்டு, போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார்.
நீளம், உயரம் தாண்டுதல்
பொதுப்பிரிவு பெண்களுக்கு இன்று, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் அல்லது கிரிக்கெட் பந்து எறிதல் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்று முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற பெருமை பெறுவேன் என்று கூறியுள்ளார் பிரித்திகா யாஷினி.
தொப்பை இருக்கே பாஸ்
ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற ஆண் காவலர்களில் சிலர், தொப்பையை சுமந்து கொண்டு ஓட முடியாததால் தகுதி இழந்தனர். அவர்கள், தேர்வு அதிகாரியான, போக்குவரத்து இணை கமிஷனர் நாகராஜன், துணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், 'ஏழு நிமிடத்திற்குள் கோட்டை தொட்டு விட்டேன்' என, அடம் பிடித்தனர். போலீஸ் அதிகாரிகள், கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை காட்டி, அவர்களை சமாதானப்படுத்தினர்.
கோவையிலும் ஓட்டம்
கோவை, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் முதல் நாள் நடந்த ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வில், 129 பேர் தகுதி பெற்றனர்.இரண்டாம் நாளான நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 134 பெண்கள் உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 116 பெண்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு உயரம் சரிபார்க்கப்பட்டது.
மயங்கி விழுந்த பெண்கள்
இதையடுத்து, 2 நிமிடம் 30 விநாடிகளில் கடக்கும், 400 மீ., ஓட்டப்பந்தய தேர்வு நடந்தது. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பெண்களில் சிலர் பாதி துாரத்தில் மயங்கி விழுந்தனர்.
கயிறு ஏறுதல்
இதேபோன்று எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற காவல் துறையை சேர்ந்த76பேருக்கு உடல்தகுதி தேர்வில் பங்கேற்க நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 75 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 1,500 மீ., ஓட்டப்பந்தய தேர்வு நடந்தது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கு இன்று நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 10000மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற உடல்திறன் தேர்வுகள் நடத்தப்படுகிறது.