சஸ்பெண்ட் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அறைகளுக்கு பூட்டு… அலுவலகமும் மூடல்
சென்னை: உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி, 10 நாட்களுக்கு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தங்கும் விடுதி அறைகளும், அலுவலகமும் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தே.மு.தி.க. சட்டமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த கருத்துக்களால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது அவைக்காவலர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது.
எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெற்று வரும் கூட்டத்தொடர் முடிய இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி இந்த கூட்டத்தொடர் முடிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உரிமை மீறல்
இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபை உரிமைக்குழு ஆய்வுக்கு விடப்பட்டது. இதில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு மேற்கு), மோகன்ராஜ் (சேலம் வடக்கு), எஸ்.ஆர்.பார்த்திபன் (மேட்டூர்), வெங்கடேசன் (திருக்கோவிலூர்), சி.எச்.சேகர் (கும்மிடிப்பூண்டி), தினகரன் (சூலூர்) ஆகிய 6 பேர் மீது உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. உரிமைக்குழு தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தியது. இந்த குழு தனது பரிந்துரைகளை சட்ட சபையில் கடந்த 31ஆம் தேதி வழங்கியது.
சலுகைகள் கட்
அந்த பரிந்துரையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வி.சி. சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ், சி.எச்.சேகர், வெங்கடேசன், தினகரன், பார்த்திபன் ஆகிய 6 பேரையும் அடுத்த கூட்டத்தொடரின் 10 நாட்கள் வரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த கால கட்டத்தில் சம்பளம் உள்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சட்டசபையில் ஏற்பு
இந்த பரிந்துரைகள் சட்டசபையில் ஏற்கப்பட்டது. இதனால் சபாநாயகர் தனபால் உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகம் ஈடுபட்டுள்ளது.
விடுதிக்கு பூட்டு
சென்னை அரசினர் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளையும் காலி செய்யும்படி கூறினார். அதன் பிறகு இப்போது அந்த வீடுகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது.இதனால் 6 எம்.எல்.ஏ.க்களும் விடுதி அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கும் பூட்டு
இதேபோல் அவரவர் தொகுதியில் உள்ள அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் தனது பணியையும் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.