ஒசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி: ஒசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் இன்று மாலை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஒசூர் நகராட்சி 2012 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.
ஒசூர் நகரம் தொழில்துறையில் வளர்ந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அருகாமையிலுள்ள 8 ஊராட்சிகளை இணைத்து ஒசூர் மாநகராட்சியாக மாற்றப்படும். இதன் மூலம், கட்டமைப்பு வசதிகள் அதிகம் கிடைக்கும்.
ஒசூர் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து, இறகு பந்து விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும். அதேபோல கிருஷ்ணகிரி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் உட்பட 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் ஒசூர் நகரம் தமிழகத்தின் 13வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.