ஓசூரில் தலைமை காவலர் முனுசாமி கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
சென்னை: ஓசூரில் கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது, தலைமை காவலர் முனுசாமி கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் போலீஸ் ஏட்டு முனுசாமி கொள்ளையர்களால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கே.ஆர்.புரா அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கொள்ளையனை கடந்த 15ந் தேதி இரவு போலீசார் பிடித்தனர்.
இக்கொலையில், தொடர்புடைய முஜாமில், விக்னேஷ், அமரா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஏட்டு முனுசாமி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அமரா, கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரை நேற்று முன் தினம் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.