ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி
மயிலாடுதுறை: ஓசூர் - சீர்காழி.. இரண்டு நகை கொள்ளைகளை நிகழ்த்தியது வடமாநில கொள்ளையர்கள் தான். இரண்டு தரப்பு கொள்ளையர்களுமே சிக்கியது ஜிபிஎஸ் கருவியால் தான்.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் தெலுங்கானாவில் பிடித்த போலீசார், சீர்காழி கொள்ளையில் 12 மணி நேரத்திற்கு முன்பே பிடித்துள்ளார்கள்.
இரண்டு கொள்ளையிலும் கொள்ளையர்கள் பிடிபட முக்கியமான காரணம் ஜிபிஎஸ் கருவி. ஒசூர் கொள்ளையர்கள் எடுத்து சென்ற நகை பையிலும், சீர்காழி கொள்ளையில் கொள்ளையர்கள் எடுத்து சென்ற காரிலும் ஜிபிஎஸ் இருந்தது இவையே கொள்ளையர்கள் சிக்கியதற்கு காரணம்.
கொள்ளையர்கள் சிக்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அண்மையில் திருடி சென்ற கொள்ளையர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிடிபட்டனர். அவர்கள் திருடி செல்லும் போது நகைகள் வைத்திருந்த பையுடன் சேர்த்து தூக்கி சென்றதால், அதில் இருந்த ஜிபிஎஸ் கருவியால் மொத்தமாக சிக்கிக்கொண்டனர்.
தெலுங்கானாவில் கைது
கொள்ளையர்கள் ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது முதல் தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே கண்டெய்னரில் பதுஙகி செல்வது வரை ஜிபிஎஸ் கருவியில் தெரிந்த காரணத்தால் கொள்ளையர்களை போலீசாரால் எளிதில் பிடிக்க முடிந்தது. 7 கொள்ளையர்களையும் தெலுங்கானா மாநில போலீசார் உதவியுடன் பிடித்த தமிழக தனிப்படை போலீசார், அவர்கள் கொள்ளை அடித்துச் சென்ற நகை, பணத்தை பத்திரமாக மீட்டனர்.
நகை வியாபாரி
இந்நிலையில் சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தொடர்புள்ள கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 6 தனிப்படை அமைத்து தேடிவந்தனர்,.
ஜிபிஎஸ் கருவியால் சிக்கினர்
இந்நிலையில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொன்று நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று கொள்ளையர்கள், நகை வியாபாரியின் காரிலேயே தப்பி உள்ளனர். நகை வியாபாரியின் காரில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் கார் எங்கு செல்கிறது. எங்கு சென்றதை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கிடையே சீர்காழி அருகே வயல்வெளி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை அருகில் இருந்த மக்கள் யார் என்று விசாரித்த போது முண்ணுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அப்போது போலீசார் பொதுமக்களின் உதவியுடன் அங்கு வந்து கொள்ளையர்களை பிடித்தனர்.
முக்கிய காரணம்
இதற்கிடையே ஒரு கொள்ளையன் தப்பி ஓட முயன்றதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க முக்கிய காரணமாக ஜிபிஎஸ் கருவி இருந்துள்ளது. ஒசூர் கொள்ளையிலும் ,சீர்காழி கொள்ளையிலும் விரைந்து செயல்பட்டு தமிழக போலீசார் கொள்ளயர்களை பிடிக்க ஜிபிஎஸ் கருவி முக்கிய உதவியாக இருந்துள்ளது.