ஜூலை மாதத்தில் அக்னி போல வீசும் அனல் காற்று... சதமடித்த வெயிலால் மக்கள் தவிப்பு
ஜூலை மாதத்தில் அக்னி நட்சத்திர காலம் போல தமிழகத்தில் அனல் காற்று வீசி வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளதால் மக்கள் தவிப்பு
சென்னை: கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. மே மாதம் போல ஜூலை மாதத்தில் அனல் காற்று வீசுகிறது. பல மாவட்டங்களில் வெப்பம் நூறு டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையால் தென் மாவட்டங்களில் குளுமை பரவியது. வெப்பச்சலனத்தினால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து, கடந்த சில தினங்களாகவே வெப்பம் தகிக்கிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 3வது நாளாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது. விடுமுறை நாளான நேற்று அனல் காற்று வீசியதால் பல நகரங்களில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
தமிழகத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேகக்கூட்டமில்லை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கடல் காற்று தாமதமாக வீசி வருகிறது. மேலும் உள் தமிழகத்தில் வானத்தில் குறைவான மேகமூட்டமே காணப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
சுட்டெரித்த வெயில்
வெப்பநிலை அதிகரிப்பால் கோடை காலத்தை போல வெயில் வறுத்தெடுத்தது. லேசான தூறல்... அவ்வப்போது மழை என்றிருந்த சென்னையில் வெயில் சுட்டெரித்தது. சென்னை நகரில் 101 டிகிரி வெயில் பதிவானதுடன் கடல் காற்றும் குறைந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது.
சதமடித்த வெப்ப நிலை
மதுரையில் 107 டிகிரி பாரன்ஹீட், கடலூரில் 105 டிகிரி, திருச்சி மற்றும் வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது.
திருத்தணியில் 103 டிகிரி, திருச்சியில் 102டிகிரி, தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் 101 காரைக்காலில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பத்திற்கு காரணம்
தமிழகத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேகங்கள் அற்ற தெளிவான வானம், காற்று கீழிறங்கி அழுத்தம் பெறுதல், மேற்கிலிருந்து மிதமாக வீசும் வடகாற்று ஆகியவை வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெயில் சுட்டெரிப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்துவிட்டதால் மேல்நிலை காற்றில் இருந்த ஈரப்பதம் குறைந்து, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்தான் வட மாவட்டங்களில் அக்னி வெயில் காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது.
மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை வரை வெப்பம்
வட மாவட்டங்களில் புதன்கிழமை வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், 26ஆம் தேதிக்கு மேல் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.