மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிப்பு.. வாடகை வீட்டில் இருந்து திரும்பும் சொந்த வீட்டுக்காரர்கள்
மவுலிவாக்கத்தில் 11 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தை இடித்ததையடுத்து, காலி செய்து கொண்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்ற சொந்த வீட்டுக்காரர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
சென்னை: எப்போது வேண்டுமானாலும் 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த சொந்த வீட்டுக்காரர்கள் காலி செய்து கொண்டு பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு பிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆபத்தான கட்டடம் நேற்று இடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்ப வரத் தொடங்கி உள்ளனர்.
சென்னையை அடுத்து மவுலிவாக்கத்தில் 11 அடுக்குகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த இரண்டு கட்டடங்களும் கட்டி முடிப்பதற்குள் 2014ம் ஆண்டு ஒரு கட்டடம் தானாகவே திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற கணக்கு தெரிவதற்கு முன்பே அவசர அவசரமாக இடிபாடுகள் அகற்றப்படாமல் மூடப்பட்டன.
இதனையடுத்து, நன்றாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடம் இப்படி திடீரென இடிந்து விழுந்ததில், அதன் அருகில் வசித்த வந்த சொந்த வீட்டுக்காரர்கள் அச்சமடைந்தனர். பக்கத்திலேயே இருக்கும் இன்னொரு கட்டடமும் எப்போது விழுமோ என்று அன்றாடம் பயந்து பயந்து வாழ்ந்து வந்தனர். இதனால் பல சொந்த வீட்டுக்காரர்கள் வீட்டை காலி செய்து கொண்டு பல்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், கட்டட இடிபாடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட், ஆபத்தான நிலையில் எப்போது விழுமோ என்று நின்று கொண்டிருந்த இன்னொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, நேற்று மாலை நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொண்டனர். மேலும், காலி செய்து கொண்டு வேறு இடங்களுக்கு சென்றவர்கள் ஒவ்வொருவராக தங்களது சொந்த வீட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த வீட்டிற்கு திரும்புவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.