வீட்டிலேயே மதுக்கடை... இரவோடு இரவாக திறக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு... முற்றுகையிட்டு போராட்டம்
தெருக்களில் மதுக்கடையை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் சூழலில் வீட்டிலேயே மதுக்கடையை இரவோடு இரவாக திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை: குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் ஊராட்சியில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனை பக்கத்து ஊராட்சியான கருப்பூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் புதிய வீட்டை கட்டி அதில் டாஸ்மாக் கடை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது.
வீட்டில் திறக்கப்பட்ட அந்த கடையை இன்று திறக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிர்பந்தம்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு ஆளானது.
எதிர்ப்பு
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை ஊருக்குள் மீண்டும் திறக்க மாநில அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகளை திறக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உருப்படுமா?
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் ஊராட்சியில் வீட்டில் டாஸ்மாக் திறக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. பெரும் அவமானத்திற்குரிய இந்த சம்பவத்தை எதிர்த்து ஊர் பொதுமக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலேயே டாஸ்மாக்கை திறக்கும் நாடு உருப்படுமா என்று பெண்கள் கேள்வி கேட்கின்றனர்.
முற்றுகை
இந்த மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பந்தநல்லூர், கீழ்மாந்தூர், கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஓரணியாக திரண்டு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். திருவிடைமருதூர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. வீட்டில் இறக்கப்பட்ட மதுபாட்டில்களை அகற்றும் வரை நகரமாட்டோம் என்று ஊர் மக்கள் உறுதியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.