போராட்டக்காரர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு... வி.எச்.பி. ரத யாத்திரைக்கு இல்லையோ?
விஎச்பியின் ரதயாத்திரையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த தடை உத்தரவு ரதயாத்திரைக்கு மட்டும் எப்படி பொருந்தாது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
திருநெல்வேலி: விஎச்பியின் ரதயாத்திரையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவு எப்படி எதிர்த்து போராடுபவர்களுக்கு மட்டும் பொருந்துகிறது கூட்டமாக வரும் ரதயாத்திரைக்கு பொருந்தவில்லை என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.
ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடியும் ரதயாத்திரைக்கு விஷ்வஇந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரை கேரளா வழியாக இன்று காலையில் தமிழக எல்லையான திருநெல்வேலி மாவட்டம் புளியரையை அடைந்துள்ளது.
ரதயாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இதன் காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விஎச்பி ரதயாத்திரையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
எதற்காக 144 தடை உத்தரவு?
பொதுவாக 144 தடை உத்தரவு எதற்காக பிறப்பிக்கப்படும் என்றார் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.
பொதுஇடத்தில் கூடக்கூடாது
இந்த தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது. உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீறினால் என்ன தண்டனை?
தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
போராட்டக்காரர்களுக்கு மட்டுமே
144 தடை உத்தரவு என்பதே 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்பதற்காக விதிக்கப்படுவது தான் ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள தடை உத்தரவு விநோதமானதாக இருக்கிறது. கூட்டமாக ரத யாத்திரை வரும் விஎச்பியினருக்கு தடையில்லை, ஆனால் எதிர்த்து போராடுபவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவாம். 144 தடை உத்தரவிலேயே இது புதுவகையாக இருக்கிறதே என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.