நிலானி மீது பாய்ந்த தற்கொலை முயற்சி வழக்கு.. சிறையில் தள்ளப்படுவாரா? தப்பிக்க முடியுமா?
Recommended Video
சென்னை: தற்கொலைக்கு முயற்சி செய்ததற்காக சின்னத்திரை நடிகை நிலானி மீது சட்ட பிரிவு 309 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை இயக்குனர் லலித் குமார் மற்றும் நிலானி இடையே நீண்டகாலமாக பழக்கம் இருந்து வந்தது. இருப்பினும் சமீபகாலமாக லலித்குமார் நடவடிக்கைகளால் கோபம் ஏற்படவே, நிலானி அவரை விட்டுப்பிரிய தொடங்கினார். ஆனால் லலித் குமார் விடவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்துதான் போலீஸுக்கு சென்று புகார் அளித்துள்ளார் நிலானி. காவல்துறையினர் விசாரித்த நிலையில் கோபக்காரர் என்று அறியப்படும் லலித்குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
நிலானி திடீர் மாயம்
இந்த சம்பவம் குறித்து நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும் விசாரணைக்காக அவரை தேடிய நிலையில் திடீரென மாயமாகி இருந்தார். ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு திடீரென மாயமாகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ, புகைப்படங்கள்
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில் மதியமே சென்னை திரும்பிய நிலானி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தானும் நிலானியும் நெருக்கமாக பழகியது உண்மைதான் என்றாலும் கூட அவரது போக்கு பிடிக்காமல் அவரை விட்டு விலகியதாக தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்ததால், காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார் நிலானி. ஆனால், லலித்குமார் சகோதரர் தனது சகோதரனின் தற்கொலைக்கு, நிலானிதான் காரணம் என்று கூறி அவர்கள் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டபடி இருந்தார்.
நிலானி மீது வழக்கு
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலானி, கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் காப்பாற்றப்பட்ட நிலையில், நிலானி மீது சட்டப் பிரிவு 309 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயற்சி செய்து அவர்கள் உயிர் பிழைத்துக்கொண்ட பிறகு, தற்கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக போடப்படும் வழக்கு இது. இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
சட்ட கமிஷன்
இருப்பினும் தற்கொலை முயற்சிக்குப் பிறகு உயிரோடு வந்தவர்களுக்கு இது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இந்த சட்டப்பிரிவை நீக்க தேசிய சட்ட கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து மத்திய அரசும் இந்த சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
புதிய சட்டம்
ஆனால் 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மனநல சிகிச்சை சட்டம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் இதற்கான தீர்வு உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ராஜ்யசபாவிலும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி லோக்சபாவிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் உள்ளிட்ட சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்றவர்களை, சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற 309வது பிரிவு சட்டத்தை இது நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நிலானி விஷயத்திலும் ஏற்கெனவே 309 சட்டப்பிரிவு அமலில் இருக்கும் காரணத்தினால் அதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் மனநல ஆரோக்கிய சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்காது. அவருக்கு கவுன்சிலிங் தான் வழங்கப்படும் என்று தெரிகிறது.