யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க அழகிரி சார்??
சென்னை: ஆதரவாளர்களே இல்லாமல் உள்ள நிலையிலும் தன்னால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை பேரணிக்கு அழைத்து வர முடியும் என்று அழகிரி சவால் விடுத்துள்ளது திமுக வட்டாரத்தில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற அழகிரி தனது ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டித் தீர்க்க வந்தேன் என்றார்.
திமுகவில் தான் இணைவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணியாக சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவேன் என்றும் அறிவித்திருந்தார். அச்சமயம் தனக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
அச்சுறுத்திய அழகிரி
இதைத் தொடர்ந்து அழகிரி மற்றொரு நாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுகவை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளேன். மற்றபடி பதவியை நான் விரும்பவில்லை. தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அடுத்த கட்ட நடவடிக்கை
திமுக தொண்டர்கள்தான் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணிக்கு என்னை தலைமை வகிக்குமாறு அழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த பேரணியின் போது ஸ்டாலின் அணிக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என்று சவால் விடுத்திருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி முதல் அவரது வீட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அன்று முதல் அவரது வீட்டுக்கு சாரை சாரையாக ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
கோபமான அழகிரி
இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அழகிரியின் வீட்டுக்கு வெறும் 10 முதல் 15 பேர் வரை மட்டுமே வந்தனர். இதனால் அழகிரி கடும் கோபத்தில் இருந்தார். அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் வந்ததால் மேலும் கோபமான அழகிரி அவர்களை விரட்டினார்.
ஏற்க தயார்
கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்ற அழகிரி இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது என்னை கட்சியில் இணைந்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று மாற்றி பேசினார். இந்நிலையில் இன்று அவர் மதுரையில் அளித்த பேட்டியில் நான் கருணாநிதியின் மகன். சொன்னதை செய்வேன் என்று கூறியுள்ளார். ஆலோசனை நடத்துவதற்கே ஆட்களை காணோம். இதில் பேரணிக்கு லட்சம் பேருக்கு அழகிரி எங்க போவாரோ?