இந்தியன் 2 படப்பிடிப்பு 3 பேரை காவு வாங்கிய கிரேன்.. பரபர பின்னணி என்ன?
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேரை காவு வாங்கிய கிரேன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நசரத்பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமாக கிரேன் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
கீழ்ப்பாக்கம்
இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விசாரணை
இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்துக்கு முழு காரணம் கிரேன் ஆபரேட்டரின் அஜாக்கிரதை என்றே கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
40 அடி
பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம்சிட்டியில் செட் அமைக்கப்படும் அளவுக்கு இடங்கள் விசாலமாக இருக்கிறது. படப்பிடிப்புகளில் செட் அமைக்கப்படும் போது அங்கு ஒளிக்காக பிரம்மாண்ட லைட்கள் அமைக்கப்படும். இந்த லைட்களை பிடிக்க இன்டஸ்டிரியல் கிரேன் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தப்படும் கிரேன்கள் 40 அடி கொண்டவையாகவே இருக்கும்.
ராட்சத கிரேன்
ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் 200 அடி உயர ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரவில் எடுக்கப்படும் காட்சிகள் பகல் போல தெரிவதற்காக ஏராளமான லைட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன் தவறி விழுந்து விட்டது. இந்த கிரேனின் எடை டன் கணக்காகும். இதில் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் கிரேனை இயக்கியவர் அனுபவமில்லாதவர் என கூறப்படுகிறது.