முதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி..? கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை: தன்னலமற்ற உழைப்பால் தான் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் பல உதாரணங்களை கூறினார்.
ஒவ்வொரு தொண்டனும், நிர்வாகியும் கட்சிக்காக தன்னலமற்று உழைத்தால் அவர்களை பதவி தேடி வரும் என ஊக்கப்படுத்தினார்.
ஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை
ஆலோசனை
அதிமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருக்கும் அம்மா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அந்தப் பேரவையின் மாநிலச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பை ஏற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் கலந்துகொண்டனர்.
உற்சாகம்
தன்னலமற்ற உழைப்பால் தான் முதலமைச்சர் பதவி தமக்கு கிடைத்ததாகவும், அம்மா பேரவையில் தாம் இருந்தபோது செய்த பணிகள் குறித்தும் தெரிவித்தார். மேலும், அம்மா பேரவையினர் அரசின் திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வெகுவிமரிசையாக
வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் வருவதால் அதனை வெகு விமரிசையாக கொண்டாடுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் அம்மா பேரவை சார்பாக பொதுக்கூட்டங்கள் நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய நிர்வாகிகள்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அனைத்து முன்னணி நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.