புண்ணியம் பெருகும் ஆடிப்பெருக்கு!
சென்னை: ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். சிறுவர்கள் படையலிட்ட மஞ்சள் கயிற்றினை கழுத்து மற்றும் கைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் கட்டிக் கொள்வார்கள்.
பொங்கி வரும் காவிரி
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கு
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. தமிழ் மாதமான ஆடி 18ம் நாள் பெருக்கெடுத்து வரும் காவிரித் தாயை மலர்தூவி வரவேற்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரியாறு தமிழ்நாட்டில் நுழையும் பகுதி ஒகேனக்கல். இங்கு மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆடியில் விவசாயிகள்
சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி களைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.
புதுமணத்தம்பதிகள்
ஆடி 18ம்தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம்.
ரங்கநாதர் சீர்வரிசை
காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு, ரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.
பவானி கூடுதுறை
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்க மேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
நன்மை பெருகும் ஆடிப்பெருக்கு
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும் என்பது நம்பிக்கை.