எப்பப் பார்த்தாலும் இப்படி காமெடி பீஸாவே இருந்தா எப்படி பிரதர்....?
சென்னை: கொஞ்சம் கூட சீரியஸாகவே இருக்க மாட்டேன் என்கிறார் நடிகர் கார்த்திக். நடிப்பைப் போலவே அரசியலிலும் அவர் குணச்சித்திரத்தைக் காட்டி குழப்பி வருவதால் இவர் நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் படத்தில் வரும் வசனம் போலவே மாறியிருக்கிறது இவரது அரசியல் வாழ்க்கை.
இருக்கு ஆனா இல்லை.. எஸ்.ஜே.சூர்யா போல காங்கிரஸில் இருக்கிறாரா, இல்லையா என்பதைப் போட்டு குழப்பி சொதப்பிக் கொண்டிருக்கிறார் கார்த்திக்.
வாசன் போனதால், வாசம் போன மலர் போல வாடிக் கிடந்த காங்கிரஸ் முகாமுக்கு திடீரென கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக் கொண்டு வந்து கார்த்திக், அனைவருக்கும் ஹாய் சொன்னபோது, போன உசுரு திரும்பி வந்ததைப் போல அகமலர்ந்து போனது காங்கிரஸ் வட்டாரம். கார்த்திக்கோடு அவரது கட்சியும் காங்கிரஸில் இணைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் உள்ளே போன கார்த்திக் வெளியே வந்தபோது, நான் இணையவில்லை பாஸ், ஆதரவு தெரிவிக்கவே வந்ததாக கூறி அனைவரையும் கலங்கடித்தார் சிரித்தபடியே.
ஆனால் கார்த்திக் பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர் எப்பவுமே இப்படித்தான் பாஸு என்று தெளிவாகச் சொல்வார்கள். கார்த்திக் ஒரு குப்பாச்சு குழப்பாச்சு என்பதற்கு விகடனில் கடந்த மார்ச் மாதம் வந்த இந்தப் பேட்டியைப் படித்தால் தெரியும். வாங்க படிச்சுப் பார்க்கலாம்...
காணாமப் போய்ட்டீங்களே பாஸ்!
'நாடாளும் மக்கள் கட்சி இடையில் சில வருடங்களாகக் காணவில்லையே! ஏன் இந்த அரசியல் இடைவெளி?''
'எங்கயும் போகல பிரதர்... இங்கதான் இருக்கேன்! மறைமுகமாக மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருந்தோம். சிவகாசியில் நீர்நிலை அருகிலுள்ள சில கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்துப் போராடினோம். அந்தப் போராட்டத்துக்கு நான் போனபோது மதுரையில முக்கியமான கட்சியைச் சேர்ந்த ஒருத்தர் அங்கே வந்திருந்தார். அவர் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. ஆனா நாங்கதான் கேட்டோம். ஏன்னா நாங்கள் மக்கள் போராளி!
வெளில சொல்லிக்கிறதில்ல பிரதர்
கடந்த வருஷம் நடந்த பசும்பொன் ஐயா விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இறந்தவரின் குடும்பத்துக்கு உதவிகளை செஞ்சோம். இதையெல்லாம் நாங்க வெளிய சொல்லிக்கிறது இல்ல. ஒரு கை கொடுக்கிறது... இன்னொரு கைக்குத் தெரியக் கூடாதுன்னு சொல்லுவாங்க. நாங்களும் அப்படித்தான் உதவிகிட்டு இருக்கோம். அப்படி உதவுறதாலதான் மக்கள் எங்களை விரும்புறாங்க. இல்லைன்னா பாலிட்டிக்ஸ்ல நிலைச்சிருக்க முடியாது பிரதர்!''
காங்கிரஸ் பயப்படுது
காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளதே... அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கா?
காங்கிரஸ் கட்சி இலங்கையைக் கண்டிக்க பயப்படுகிறது. இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஆனால், இலங்கைக்கு சீனாவின் உதவி இருப்பதைக் கண்டு இந்தியா பயப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர்தான் இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். நாம் அனைவரும் இந்தியத் தமிழர்கள். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு உரிமையும் ஈழத் தமிழனுக்கும் கிடைக்க வேண்டும். மீனவர் பிரச்னை சுலபமாகத் தீர்க்கக்கூடிய பிரச்னை. நம் தொப்புள்கொடி உறவுக்கு பிரச்னை வரும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர்களுக்கு சம உரிமை சமத்துவம் கிடைக்கப் போராட வேண்டும். மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் நிச்சயம் போராடுவோம்!''
அதையெல்லாம் போய்க் கேட்டுக்கிட்டு
உங்கள் கட்சியின் ஓட்டு சதவிகிதம் என்ன?
அதை இந்த நேரத்தில் பகிரங்கமாக உங்களிடம் சொல்ல முடியாது. எங்கள் கட்சியின் ஓட்டு சதவிகிதம் வளர்பிறைபோல நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு அது எல்லோருக்கும் தெரியும்!
அதை எப்படி நான் தீர்மானிக்கிறது...!
ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட வருடத்தைச் சொல்லி, ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறார்கள். உங்கள் கட்சி எப்போது ஆட்சியைப் பிடிக்கும்?
அதை நான் எப்படி தீர்மானிக்க முடியும்? மக்கள்தான் முடிவு செய்யணும். இந்த வருஷத்துல நா.ம.க. ஆட்சிக்கு வரணும்னு அவங்க முடிவு பண்ணட்டும். ஆட்சிக்கு வந்துதான் மக்களுக்கு நன்மை செய்யணும்னு ஏதாவது இருக்கா என்ன? மக்களுக்கு நல்லது செய்ய கட்சி ஆரம்பிச்சேன். செஞ்சிட்டு இருக்கேன்!
மக்கள் ரொம்பத் தெளிவு பிரதர்
தமிழ்நாட்டு மக்கள் இப்போ ரொம்பவும் தெளிவா இருக்காங்க. அவங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றணும்னு யாராவது நினைச்சா அவங்கதான் ஏமாந்து போவாங்க!
குடிக்கிறது தப்பு பிரதர்!
மதுவிலக்கு அமல்படுத்துவது பற்றி உங்க கட்சியின் கருத்து என்ன?
''தமிழ்நாட்டுக்கு வரும் வருமானத்துல பாதி அதுல இருந்துதான் கிடைக்குதுன்னு சொல்றாங்க. அதனால அந்த வருமானத்துக்கு முதலில் ஒரு மாற்று ஏற்பாடு செய்யணும். வருமானம் வர ஆரம்பிச்சதும், அரசாங்கம் நடத்துற மதுபானக் கடைகளை மூடணும். என்ன காரணம் சொன்னாலும் குடிக்கிறது தப்புதானே பிரதர்!''
நான் நான் சொல்றது...!
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?
இரண்டு தேசிய கட்சிகளுடனும் ஒரு மாநில கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கேன். இன்னும் ஒரு வாரத்தில் என்ன மேட்டர் என்பது தெரிஞ்சிடும். தமிழகத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்குதோ அந்தக் கட்சிக்குதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கு. அப்படி தமிழகத்தில் பெரும்பான்மையான இடத்தை பிடிக்கணும் என்றால் அந்தக் கட்சிக்கு நாடாளும் மக்கள் கட்சியின் ஆதரவு தேவை! என்ன நான் சொல்றது கரெக்ட்தானே பிரதர்!
கண் சிமிட்டும் நேரத்தில் கார்த்திக் எப்படிக் கலக்குவார் - கலங்குவார் - குழப்புவார் - குழப்புவார் என்பதற்கு இந்தப் பேட்டி நல்ல உதாரணம்....!