தூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்? மனசாட்சியுடன் அறிவிக்குமா அரசு?
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்ட தமிழர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசார் கட்டவிழ்த்துவிட்ட போரில் மாண்டு போனது 11 பேரா? 9 பேரா ? படுகாயம் அடைந்தது எத்தனை பேர்? என்கிற அடிப்படை விவரத்தைக் கூட அரசு தரப்பில் இன்னமும் தெரிவிக்காதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வாதார உரிமைக்காக, எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்பது தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களின் கோரிக்கை. இதனை அரசுகள் 100 நாட்களாக கண்டுகொள்ளாத நிலையில் அறிவித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட அமைதிவழியில் 5 கிலோ மீட்டர் பேரணியாக வந்தனர்.
சரிந்து விழுந்த உயிர்கள்
போலீசாரின் அத்தனை தடைகளையும் உடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்த வினாடிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடுகள்... கொத்து கொத்தாக சரிந்து போய் விழுகின்றன உயிர்கள்...
எண்ணிக்கை எதுவும் தெரியாது
இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் மார்புகளை குறி பார்த்து உயிர் பிழைத்துவிடக் கூடாது என இலக்கு வைத்து அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையைத் தெரிவிப்பதில் கூட தமிழக அரசும் ஆளுநரும் முரண்படுகின்றனர். ஆளுநரோ 11 பேர் பலியாகிவிட்டனர் என்கிறார்; முதல்வரோ 9 பேர்தான் பலி என்கிறார். படுகாயமடைந்தவர் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது? கவலைக்கிடம் எத்தனை பேர் யாருக்கும் தெரியாது?
இன்று தூத்துக்குடியா?
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இப்படித்தான் ஒற்றை இலக்கில் பலி எண்ணிக்கை தொடங்கியது.. ஆனால் அது 20 ஐ தாண்டி நின்றது. தூத்துக்குடியில் பலியானோர் எண்ணிக்கை முதலிலேயே 6,7 என தொடங்கியது இப்போது 23 வரை சொல்கிறார்கள்.
பலியும் கவலைக்கிடமும்தான் எத்தனை?
படுகாயமடைந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் கவலைக் கிடம் என்கிறது தூத்துக்குடி செய்திகள். உண்மையில் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையை எப்போதுதான் பகிரங்கமாக அரசு சொல்லும்? குரங்கணி போல் மூடி மறைக்காமல் உண்மையை உலகுக்கு சொல்லுமா அரசு? என்பதுதான் கேள்வி.