நக்கீரனின் மெகா சர்வே நடத்தப்பட்ட விதம் இதுதான்...
சென்னை: சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பை 234 தொகுதிகளில் 46,800 பேரிடம் கட்சிகளின் பண பாய்ச்சலுக்கு முன்பாக நடத்தியதாக நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நக்கீரன் பத்திரிகையில் ஆசிரியர் ஆர்.கோபால் எழுதியதன் சாராம்சம்:
மக்களின் ஆதரவு யாருக்கு என்பதைக் கண்டறிவது சவாலாக இருந்த நிலையில், நக்கீரன் சர்வே படை களமிறங்கியது. ஒரு தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என 234 தொகுதிகளிலுமாக 46ஆயிரத்து 800 பேரை சந்தித்தோம். இவர்களில் சரிபாதி பெண்கள்.
புதிய-இளம் வாக்காளர்களான 18 வயது முதல் 25 வயது உடையவர்களை ஒரு தொகுதிக்கு 40 பேர் என சந்தித்தோம். இவர்களிலும் சரிபாதி பேர் பெண்கள்.
இதுபோல ஆண்-பெண் விகிதம் சரிசமமான அளவில் 26 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் தொகுதிக்கு 140 பேர்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 20 பேர் என்ற அளவில் நக்கீரன் சர்வே படை தனது கருத்துக் கணிப்பை மேற்கொண்டது.
நக்கீரன் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. கட்சிக்காரர்களிடம் கருத்து கேட்கவில்லை. பேருந்துநிலையம்- சந்தை-தேநீர்க்கடை போன்ற மக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்து, தனித்தனி நபராகவே சந்தித்தோம்.
பெண் வாக்காளர்களைப் பெரும்பாலும் வீடுகளுக்கு சென்று நேரில் சந்தித்து கருத்து கேட்டு இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
3-வது அணி நிறைய வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் களத்தில் சில தொகுதிகளில் அதன் தாக்கம் உள்ளது. சில தொகுதிகளில் தாக்கம் இல்லை.
கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் கொங்கு கட்சிகள் ராசிபுரம், நாமக்கல், குமார பாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, அந்தியூர் ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகள் பெற்று முடிவை மாற்றியமைக்கின்றன.
மழை வெள்ளம் பாதிக்காத சேலம் மாவட்ட பகுதிகளில் தொடங்கும் அ.தி.மு.க. வாக்குபலம் கோவை, திருப்பூர் என தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வலுவாக உள்ளது. மேற்கு மாவட்டங்கள் மற்றும் தேனி மண்டலங்களில் பின்வாங்கும் தி.மு.க., காவிரி டெல்டாவான தஞ்சை மண்டலத்தில் அ.தி. மு.க.வுடனும் இடதுசாரி கட்சிகளுடனும் வலுவாக மோதுகிறது.
வட மாவட் டங்களில் அ.தி.மு.க.வையும் பா.ம.க.வையும் சரி சமமாக சந்தித்து தி.மு.க. இயல்பாகவே முன்னிலை பெறுகிறது.
சாதி, மத கண்ணோட்டங்கள் பல தொகுதிகளில் கட்சி அரசியலைத் தாண்டி முன் நிற்கின்றன. புதிய வாக்காளர்களில் ஒரு தரப்பினர் தி.மு.க.வை ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இல்லை. பெண்களிடம் அ.தி.மு.க. அதிக செல்வாக்குடன் திகழ்கிறது.
வேட்பாளர்களின் தேர்வு, சாதி ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறும் இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் பண விநியோகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பண விநியோகம் பரவலாக நடைபெற்றால், கருத்துக் கணிப்பில் வெளிப்படும் முடிவுகள் மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பணப் பாய்ச்சலுக்கு முன்பாக நக்கீரன் சர்வே படை மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி முன்நிலை நிலவரம்.
இவ்வாறு நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் எழுதியுள்ளார்.