பாடாந்துறையில் புலி எப்படி இறந்தது?! - முதுமலைக் காடு மர்மங்கள்
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பாடாந்துறை வனப்பகுதியில் புலி எப்படி இறந்தது.
Recommended Video
நீலகிரி: முதுமலை வனச்சரகத்தில் நடக்கும் சில விஷயங்கள் மர்மத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். ' இங்கு வனத்துறைக்கு மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. இதனால் பந்தலூரில் இரண்டு யானைகள் சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளன. இறந்த புலியைப் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுவதைப் பார்க்கக் கூட யாரும் அனுமதிக்கப்படவில்லை' எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலையில் 321 கிலோமீட்டர் பரப்பளவில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள கூடலூர் பாடந்துறை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிய நேரத்தில் இறந்தநிலையில் புலியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
கேரள கால்நடை மருத்துவர்
முதுமலையில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக இருப்பதால், இறந்த புலிக்குப் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இந்தத் தகவல் உயர் அதிகாரிகளுக்குக் கொண்டு செல்லப்பட, கேரள முத்தங்கா வனத்துறையின் கால்நடை மருத்துவர் அருண் ஜக்கிரியா கூடலூருக்கு வந்து புலியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தார்.
அனுமதி இல்லை
புலியின் உடல் மீட்கபட்டு 24 மணிநேரத்திற்கு பிறகே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரேத பரிசோதனை குறித்து செய்தி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ‘ பத்திரிக்கையாளர்கள் புலியை படம் பிடிக்கவும் பிரேத பரிசோதனையை அருகில் இருந்து பார்க்கவும் அனுமதி இல்லை' எனக் காரணம் கூறியுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை
இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் பேசிய பத்திரிகையாளர்களும், ‘ NTCA SOP அறிவுறுத்தல்படி பத்திரிக்கையாளர்கள் புலியைப் படம் பிடிப்பது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. புலியின் பிரேத பரிசோதனையில் அதிக வெளிப்படைதன்மை வேண்டும் என்பதற்காக அழைப்பதில் தவறு இல்லை' எனக் கூறியுள்ளனர். ஆனாலும் அனுமதி அளிக்கப்படவில்லை.
சந்தேகம்
‘ ஒரு புலி இறந்து விட்டால் அது எப்படி இறந்தது, எதனால் இறந்தது, இயற்கை மரணமா, கொல்லப்பட்டதா என்பன போன்ற உண்மைகளை அருகில் இருந்து கண்டு, அதனை பொதுமக்களுக்கு தெரிய வைப்பதுதான் வனத்துறையின் பணி. அதைச் செய்யாமல் தடுப்பது புலியின் இறப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளுக்கும் மருத்துவர் இல்லை
முதுமலையைப் பொறுத்தவரை அனைத்தும் மர்மமாக உள்ளது. இத்தனை பெரிய சரணாலயம் இருந்தும் கடந்த 6 மாதமாக வனத்துறை மருத்துவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. பந்தலூரில் இரண்டு யானைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்காததால் அவைகள் உயிரிழந்துள்ளன. தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. அதனையும் கவனிக்க ஒரு மருத்துவரும் இல்லை' என வேதனைப்படுகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.