பெற்றோரே விழித்தெழுங்களேன்.. மாணவ, மாணவிகள் தற்கொலையை தவிர்ப்பது எப்படி?
Recommended Video
சென்னை: அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக ஆசிரியர்கள் திட்டினார்கள் என்று ஒரு தகவலும், தவறு செய்ததற்காக ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏற்க முடியாதது. 11ம் வகுப்பு என்பது 16-17 வயது கொண்ட நடு டீனேஜ் பருவம். இந்த பருவத்தில் மூளை சொல்வதை மனது கேட்காது என்பதே இதுபோன்ற ஆத்திர, அவசர முடிவுகளுக்கு முக்கிய காரணம்.
டீன் ஏஜ் பருவம்
காதலன் அல்லது காதலியுடன் ஓடிப்போவது, காதலில் விழுவது, படிப்பை மறந்து காதலையே நினைத்து உருகுவது எல்லாம் தப்பு என்று மூளை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டினாலும் மனதோ அதை ஏற்காது. அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்ற எண்ணம் மேம்படும். இதுதான் இயற்கை. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, அதீத ஹார்மோன் சுரப்பு போன்றவை இதுபோன்ற எண்ண மாற்றங்களுக்கு காரணமாக அமையும்.
வாழ்வில் மகுடம்
ஆனால், அதுபோன்ற சூழலிலும், மனதை கட்டியாண்டு எழுபவர்களே பிற்காலத்தில் வாழ்க்கையை வென்று மகுடம் சூட்டுகிறார்கள். அவர்கள் பிறகு வாழ்க்கையின் எந்த காலத்திலும் துவளுவதில்லை. இளம் வயதிலேயே மனதை அடக்கியாளும் பக்குவம் பெற்றவர்களை துன்பம் அணுகுவதில்லை. ஆனால் இந்த பக்குவம் எல்லோருக்கும் வாய்த்துவிடுமா?
பெற்றோரின் பங்கு
இயற்கையின் முன்பு போராடுவது என்பது இருட்டு அறையில் வாள்வீசுவதை போல கஷ்டமானது. எனவே அந்த அறையில் விளக்கை பாய்ச்சுவோராக பெற்றோர் இருக்க வேண்டும். எது எதிரி, எங்கே எதிரி நிற்கிறான் என்பதை அறிய முடியாத இருட்டு உலகம் டீனேஜ் பருவம். எதிரி தெரியாமலே போராடுவோருக்கு அதை இனம் காட்ட வேண்டியது பெற்றோர்.
வெகுநாள் திட்டம்
தற்கொலை என்பது நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு அல்ல என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். எல்லா உயிரும் போராடி வாழ்வதற்கான மரபணுக்களையே பெற்றுள்ளன. எனவே தற்கொலை செய்ய ஒருவர் முடிவெடுத்தால் அந்த மரபணு படிமங்கள் துளிர்த்தெழும். எளிதில் அந்த முடிவுக்கு அந்த நபரை போகவிடாமல் காக்கவே போராடும். அதன் அறிகுறிகள் பேச்சு, செயல் மூலம் வெளியே தெரியும். அதை அருகேயுள்ளவர்கள் உன்னிப்பாக கவனித்துவிட்டாலே தற்கொலையை தடுத்துவிடலாம்.
உடனடி கவனம்
வாழ்க்கை குறித்த அதிருப்தி பேச்சு, தற்கொலை குறித்த உரையாடல் போன்றவை அடிக்கடி ஒருவரிடமிருந்து வந்தால் உடனடியாக அவர் பேணப்பட வேண்டியவர். அன்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டியவர். உடனடியாக அவரின் மனதில் உள்ளதை வெளியே கொண்டுவருவது பெற்றோர் அல்லது நண்பர்கள் கடமை. காரணம் வெளியே வந்துவிட்டாலே, தற்கொலை எண்ணம் பாதியளவுக்கு குறைந்துவிடும்.
பெற்றோர் ஏன் கவனிக்கவில்லை
மாணவிகள் தற்கொலை விஷயத்திலும் 4 மாணவிகளில் யாராவது ஒருவரின் பெற்றோராவது முன்கூட்டியே மாணவிகள் செயல்பாட்டை உற்று நோக்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. வீட்டுக்கு வந்த மாணவிகளிடம் மனம் விட்டு தினமும் பேசும் பழக்கம் அந்த பெற்றோர்களில் ஒருவருக்கு இருந்திருந்தாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வீட்டுக்கு வரும் மகன், மகள்களை டியூசன் அனுப்பிவிட்டு, டிவியில் சீரியல்களை பார்த்தபடி இருந்தால் குழந்தைகளின் உளவியல் சிக்கல்களை பெற்றோரால் புரிந்து கொள்ள முடியாது.
மருந்துகளின் மாயம்
பெற்றோர் தலையிட்டும் கூட தற்கொலை எண்ணம் ஒருவருக்கு தொடருமானால், உடனடியாக மன நல மருத்துவரை அணுகலாம். அவர் கவுன்சலிங் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மாத்திரிகளை அளிப்பார். இது நல்ல பலனை தரும். தற்கொலை எண்ணம் மீண்டும் அவர்களுக்கு ஏற்படாது. திட்டுவதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் தினம் தினம் தற்கொலை செய்துகொள்ள வேண்டிவரும் என்பதை மாணவ செல்வங்களும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் யதார்த்தத்தோடு பயணிக்க பழக வேண்டும்.