ஜெ. ஆன்மா விடாம சுத்துதாம்.. பத்தி விடுவதற்கு சாந்தி பூஜை நடத்த மன்னார்குடி கோஷ்டி திட்டம்!
ஜெயலலிதாவின் ஆன்மாவை சாந்தியடைய செய்ய சிறப்பு சாந்தி பூஜை செய்யுமாறு மன்னார்குடி கும்பலுக்கு சில சாமியார்கள் ஆலோசனை கூறியுள்ளார்களாம்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்து வரும் மன்னார்குடி கும்பல் சிக்கலில் இருந்து தப்பிக்க ஜெ. ஆன்மாவிற்கு சாந்தி பூஜை செய்யலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது முதல் அதிமுகவில் கோலோச்ச நினைத்த மன்னார்குடி குடும்பத்திற்கு பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட்டு இப்போது கட்சியும் வேணாம் பதவியும் வேணாம் ஆளை விட்டால் போதும் என்று சொல்லும் அளவிற்கு வழக்குகளும், பிரச்னைகளும் விடாது கறுப்பாய் அவர்களைத் துரத்துகிறது. ஜெ.வின் கோடிக்கணக்கான சொத்து இருந்தாலும் அவற்றை அனுபவிக்க முடியாமல் நிம்மதியின்றி தவிக்கிறது மன்னார்குடி குடும்பம்.
ஜெ இறந்த இரண்டே மாதத்தில் அக்காவிற்காக கட்சியை நான் வழிநடத்துகிறேன் என்று கூறி கட்சிப் பொறுப்பில் அமர்ந்த சசிகலா பத்தே நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி பெங்களூர் சிறை சென்றுவிட்டார். ஆனாலும் கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை தனது குடும்பத்தை சேர்ந்த தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
பதவியாசை யாரை விட்டது
அவருக்கும் பதவியாசை தலைக்கேற சசிகலாவின் ஆலோசனையை கேட்காமல் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று பணத்தை வாரி இரைத்ததால் தேர்தல் நின்றதோடு, வழக்கில் சிக்கி அவரும் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார். இந்திய வரலாற்றிலேயே முதல் வழக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள தினகரன் மீது என்ன நடவடிக்கை பாயும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அச்சத்தில் மன்னார்குடி கும்பல்
இந்நிலையில் கொடநாடு பங்களாவில் கொள்ளை நிகழ்ந்த போது காவலாளி ஓம்பகதூர் கொலை, கொள்ளையில் யார்யாருக்கு தொடர்பு இருக்கும் என்ற விசாரணை ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா உயிரிழந்து இன்றோடு சரியாக 154 நாட்கள் முடிவடையும் நிலையில் மன்னார்குடி குடும்பத்தார் அடுத்து என்ன நடைபெறுமோ என்ற அச்சத்தில் நிம்மதியின்றி தவிப்பதாக சொல்லப்படுகிறது.
சாந்தி பூஜை நடத்தலாமா
இதனால் சிக்கலில் இருந்து தப்பிக்க மன்னார்குடி குடும்பத்தினர் ஜெயலலிதா ஆன்மாவிற்கு சாந்தி பூஜை செய்தால் நன்மை ஏற்படும் என்று சில சாமியார்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலாவின் ஆஸ்தான் நம்பூதிரிகளை அழைத்து வந்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அவர் விரும்பி வசித்த கொடநாடு பங்களாவிலும் பூஜை நடத்தலாம் என்று பேச்சுவார்த்தை நடந்ததாம்.
தயங்கும் நம்பூதிரிகள்
ஆனால் ஜெயலலிதாவின் வெற்றிக்காக பல்வேறு பூஜை நடத்தியுள்ள நம்பூதிரிகள், இப்போது நடக்கும் மன்னார்குடி வேட்டையின் போது சாந்தி பூஜை செய்தால் இதனால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.