கறுப்புப் பணத்தை எப்படி எல்லாம் வெள்ளையா மாத்துறாங்க பாருங்க!
கறுப்புப் பணத்தை மக்கள் விதவிதமான முறையில் வெள்ளைப் பணமாக மாற்றி வருகிறார்கள்.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பலர் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 9ம் தேதியில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றுவதற்காக மக்கள் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான பால் கூட வாங்க முடியாமல் முதல் இரண்டு நாட்கள் பெரும்பாடுபட்டனர். இன்று வரை வங்கிகள், அஞ்சலகங்கள், ஏடிஎம் மையங்களின் முன்பு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒரு நாள் முழுவதும் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். இன்னும் நிலைமை சீரடையவில்லை. ஆனால் பணக்காரர்கள் எப்படி எல்லாம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி வருகிறார்கள் பாருங்கள்.
• சின்ன சின்ன அளவில் நகைக் கடை நடத்தும் சேட்டு கடைகளில் மக்கள் இல்லாமல் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது.
• வங்கி கணக்கு இல்லாதவர்களிடம் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.
• வங்கிகளில் கணக்கு வைத்திருந்தும் பெரிய அளவில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடாதவர்களிடம் பழைய ரூபாயை கொடுத்து மாற்றப்படுகிறது.
• கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கட்டுக்கட்டாக பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு பின்னர் 20 சதவீத கமிஷனுடன் வெள்ளையாக மாற்றப்படுகிறது.
• வட்டிக்கு பணம் கொடுப்போர் வட்டியில்லாமல் பணத்தை கொடுத்து வருகிறார்கள்.
• ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மூலமாக பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு, சிறுதொகையை கமிஷனாக கொடுத்து வெள்ளையாக மாற்றப்படுகிறது.
• தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் கொடுக்க வேண்டிய சம்பளத்தை முன்கூட்டியே கொடுக்கப்படுகிறது.
• வெளியூருக்கு செல்வதாக மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டனர் பின்னர் டிக்கெட்டை கேன்சல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
• சிலர் கூடுதல் பணத்திற்கான வரியை செலுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி வருகின்றனர்.
• விவசாயிகள் மூலமாக வங்கியில் பணத்தை செலுத்தி அவர்களுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகைகளை பெற்றுக் கொண்டு வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது
• 4000 ரூபாய்க்கு பழைய பணத்தை மாற்றிக் கொடுத்தால் ரூ 300ல் இருந்து 500 வரை கமிஷனாக அளிக்கப்படுகிறது.
• பெரும் நிறுவனங்கள் தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களுக்கு முன் கூட்டியே பணத்தை செலுத்தி வருகின்றன.
• ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை முன்கூட்டியே பெரிய தொகை அளக்கப்பட்டு வருகிறது.
• ஆதார் கார்ட்டை காண்பித்து ஒரு முறையும், பான் கார்ட்டுகளை காண்பித்து ஒருமுறையும் என பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.