வெறும் போராட்டங்கள் போதாது... மாத்தி யோசிங்க... உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது!
Recommended Video
சென்னை: பல தலைமுறைகளாக மக்கள் பிரச்னைகளை அரசியல்வாதிகள் முன்னெடுத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிறகு எதற்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்?
ஏனென்றால் போராட்டத்தில் பின்னணியில் அரசியல் வியூகங்கள் மட்டுமே பெரும்பாலும் இருக்கும். பொதுநலத்துடன் சேர்த்து அவர்களது சுயநலமும் இருக்கும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, எதிரித் தரப்பை அதிர வைக்க, தனது செல்வாக்கை வளர்க்க, தனது சக்தியை காட்ட அரசியல் தலைவர்கள் தொண்டர்களை திரட்டி போராவேண்டியுள்ளது.
மக்களின் போராட்டம் என வர்ணிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டத்தில் எந்த அரசியல்கட்சித் தலைவர்களையும் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்படிப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களைக்கண்டு அரசுகள் அஞ்சும். பல தடைகளைத்தாண்டி ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தது. மெரினா புரட்சியைபோல் மக்கள் மீண்டும் ஒரு இடத்தில் கூடமுடியுமா? அல்லது அனுமதிப்பார்களா எனத்தெரியவில்லை. ஆனால் மாத்தி யோசிக்க வேண்டிய நேரமிது.
பழைய போராட்ட முறைகளுக்கு விடைகொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற வடிவங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். இந்த போராட்ட வடிவங்களின் மீது மக்களுக்கும் நம்பிக்கை குறைந்துள்ள காலம் இது. சரி என்னதான் செய்யவேண்டும்?
உலக கவனத்தை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்
நாம் வாழ்வது டிஜிட்டல் யுகம். தமிழகம் வெறும் சிறிய மாநிலம் அல்ல, உலகம் முழுவதும் உற்றுநோக்கப்படும் மாநிலம். தமிழகத்தில் என்ன நடந்தாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இப்படி இருக்க, சென்னையில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டி ஒரு அருமையான வாய்ப்பு என்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அமைதியான முறையில், போட்டியை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும். அப்போது மிக எளிதாக சர்வதேச கவனத்தை பெறலாம். மத்திய அரசு நிச்சயம் பதில் சொல்லியே தீரவேண்டும்.
ஐபிஎல்லை எப்படி பயன்படுத்திக்கலாம்
இன்னும் பலர் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்குச் சென்று உள்ளே தமிழக ஆதரவு பதாதைகளை காட்டவேண்டும் என்று சொல்லிவருகின்றனர். போட்டி நடத்தப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்று திருமுருகன் காந்தி, வேல்முருகன் எச்சரிக்கிறார்கள். மைதானத்தையும், வீரர்களையும் முற்றுகையிடுவோம் என்று தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். ஆனால் போட்டி திட்டமிடப்பட்டி நடக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டோல் கேட் தாக்குதல்
தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையிலான தொண்டர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள். இந்தசம்பவம் வன்முறை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மக்கள் வேல்முருகனின் போராட்ட வடிவத்தை ஆதரித்து வருகின்றனர். ஏனென்றால் பழைய போராட்ட வடிவங்கள் வலுவிழந்துவிட்டன. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதை காட்டுகிறது என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர்.
கேள்வி கேட்க முடியாது
ஆனால், வேல்முருகன் குழுவினர் முன்னெடுத்த போராட்டத்தை நீதிமன்றம் கண்டிக்கலாம். ஆனால், அமைதியான முறையில் வித்தியாசமாக போராட்டம் நடத்தினால், யாரும் கேள்வி கேட்க முடியாது, கோர்ட்டிலும் வழக்குப் போட முடியாது.
பொழுதுபோக்குக்கு டாட்டா சொல்லுங்கள்
வீதிக்கு வந்து தான் போராட வேண்டும் என்று இல்லை மக்கள் தங்களது எதிர்ப்புகளை வேறு வழிகளிலும் காட்டலாம். வார இறுதிகளில் மக்கள் பொழுதுபோக்கும் இடங்கள் என கட்டி எழுப்பப்பட்டுள்ள பல அடுக்கு ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகளுக்கு செல்வதை நிறுத்துங்கள். வாங்கும் திறன் அதிகம் உள்ளதால் ஜிஎஸ்டி வரியாக மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மக்களிடம் இருந்து அதிக வரிப்பணம் போகிறது, அதனை குறைத்தாலே மத்திய அரசு வழிக்கு வரும்.