பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் தெரியுமா?
பெட்ரோல் பப்ம் மையங்களில் நீங்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று அறிந்துகொள்ள, எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சென்னை: வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன.
பெட்ரோல் பப்ம் மையங்களில் நீங்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று அறிந்துகொள்ள, எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காட்டும் 'கைவரிசை'. என்றாவது பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரப்பும் பைப்பை டேங்கரில் சொருகிவிட்டு ரிலாக்சாக நின்று நீங்கள் பார்த்துள்ளீர்களா? அப்படி நிற்கமாட்டார்கள்.
பைப் டெக்னிக்
பைப்பை கையில் பிடித்தபடியே இருப்பர். இதற்கு காரணம், அவ்வப்போது அந்த பைப்பின் இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி பிரஷர் கொடுப்பதற்காகத்தான். இப்படி செய்யும்போது, மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தபோதிலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.
சீக்கிரமே பைப்பை எடுப்பது
இந்த மோசடியை நீங்கள் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். 500 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்ப நாம் கூறியிருப்போம். ஆனால் 500 நெருங்கும்போதே பெட்ரோல் பைப்பை வாகனத்தில் இருந்து எடுப்பது வழக்கம். மீட்டரில் 500 ரூபாய் என காட்டினாலும்கூட அந்த குழாய் முழுக்க நிற்கும் பெட்ரோல் நமது வாகனத்திற்குள் வராது. குழாயிலேயே தேங்கிவிடும். எனவேதான் கடைசி சொட்டு முடியும் வரை குழாயை வாகனத்தின் டேங்கருக்குள் எந்த ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரும், வைத்திருப்பதில்லை.
கவன சிதறல்
சில நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் பங்க் ஊழியர்கள் நைசாக பேச்சுக்கொடுத்து முழு அளவு நிரப்பப்படும் முன்பே எரிபொருள் சப்ளையை நிறுத்தியும் மோசடி செய்வது வழக்கம்.
கணக்கு மோசடி
இன்னொரு வகை மோசடி கணக்கு மோசடி. அதாவது, நாம் 1000 ரூபாய்க்கு எரிபொருளை நிரப்ப கூறியிருந்தோம் என வைத்துக்கொள்ளுங்கள், வேண்டுமென்றே பங்க் ஊழியர் 200 ரூபாய்க்கு போட்டுவிட்டு நிறுத்திவிடுவார். நாம் 1000 ரூபாய்க்கு போடுப்பா.. என திரும்ப ஒருமுறை கூறியபிறகு, ஓ அப்படியா.. என இப்போதுதான் விளங்கிக் கொண்டவர் போல திரும்ப நிரப்ப ஆரம்பிப்பார். மீட்டரில் ரூ.800 காட்டியதும் நிறுத்திவிடுவார். நாமும் 1000 ரூபாய் கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவோம். ஆனால், மறுபடியும் எரிபொருளை நிரப்ப ஆரம்பிக்கும்போது மீட்டரை பூஜ்யம் செய்திருக்காமல் ஏமாற்றியிருப்பார். இதனால் மொத்தமாக வாகன உரிமையாளருக்கு கிடைத்த பெட்ரோல் அளவே 800 ரூபாய்க்குதான் இருக்கும். இழப்போ ரூ.200. சிலர் மீட்டரை பூஜ்யம் செய்ய சொல்வர். அல்லது 1000 காட்டும்வரை எரிபொருள் போடச் சொல்லிவிடுவர். ஆனால் கவனிக்காத கஸ்டமரே இவர்களின் எளிதான இலக்கு.
மீட்டர் மோசடி
இன்னொரு வகை மோசடி பலரும் அறிந்திராதது. ரூ.500க்கு எரிபொருள் நிரப்ப சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். மீட்டரில் அந்த பண மதிப்பை பங்க் ஊழியர் ரூ.500 என டைப் செய்வார். எரிபொருள் நிரப்பப்படும் இடைவேளையில் வாடிக்கையாளர் கவனத்தை திசைதிருப்பிவிட்டு, மீட்டரில் தில்லுமுல்லு செய்துவிடுவார். ஆனால் இதை கண்டுபிடிக்க ஒரு வழியுள்ளது. இப்படி மீட்டரை டேம்பர் செய்யும்போது, மீட்டரில் டிஸ்பிளேயாகும் குறிப்பிட்ட தொகை மினுங்கி கொண்டே இருக்கும். நிலையாக காட்டாது. இதை வைத்து ஏமாற்றுபவரின் சட்டையை பிடிக்கலாம்.
எனவே உஷார் மக்களே.