'தீரன்' பெரியபாண்டி உயிரிழக்க இதுதான் காரணமா? இனியாவது முன்னெச்சரிக்கை எடுக்கப்படுமா?
Recommended Video
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்துள்ள நிலையில், இதுபோன்ற நிலையை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பரில் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளை நடந்த இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள்குறித்த தகவல் கிடைத்தது.
ராஜஸ்தான் சென்ற தனிப்படை
இதையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலக் கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ராஜஸ்தான் சென்றனர்.
அதிகாலை ஆபரேசன்
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரான் காவல் நிலையத்துக்குட்பட்ட, ராம்புர்கலான் கிராமத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருந்தனர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் தமிழக தனிப்படை போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையன் சுட்டதில் பெரியபாண்டி உயிரிழந்தார். முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரியபாண்டி குடும்பத்தில் சோகம்
இந்த சம்பவம் தமிழக காவல்துறையை உலுக்கி எடுத்துள்ளது. தீரன் திரைப்பட காட்சிகளை நினைவுபடுத்துவதை போல உள்ளது இந்த சம்பவம். உயிரிழந்த பெரியபாண்டி குடும்பத்தார் அழுகுரல் விண்ணை முட்டுகிறது. இந்த நிலை ஏற்பட காரணம் என்ன என்பதை அறிந்தால்தான் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தீரம்மிக்க தமிழக போலீசாரை காப்பாற்ற வழி பிறக்கும்.
ஹேமந்த் கர்கரே சம்பவம்
இந்த நேரத்தில் ஒரு பிளாஷ் பேக் சம்பம் உங்கள் நினைவுக்கு வரக்கூடும். மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே. இவர் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்திருந்தபோதும் அதை துளைத்து குண்டு உள்ளே நுழைந்தது. தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்திருந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
புல்லட் ப்ரூப் ஜாக்கெட்
ராஜஸ்தானின் பயங்கர கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீஸ் டீமுக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அளிக்கப்பட்டிருந்ததா? அப்படி அளிக்கப்பட்டு அவர்கள் அணிந்திருந்தார்களா? அணிந்திருந்தால் எப்படி பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். முனிசேகர் எப்படி படுகாயமடைந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு தமிழக காவல்துறை தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
கொடூர கொள்ளையர்கள்
ராஜஸ்தான் கொள்ளையர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்த கள அனுபவம் அறிந்தவர்கள் தமிழக போலீசார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அப்படியிருந்தும், கொள்ளையர்களை அதிகாலையில் மடக்கி பிடிக்க சென்றபோது புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் அணிந்திருக்க வேண்டுமல்லவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை
சந்தேகங்கள்
மேலும், உள்ளூர் போலீசாரை அழைத்துக்கொண்டு ஏன் தமிழகப் போலீஸார் செல்லவில்லை ? என்ற கேள்வியும் எழுகிறது. உள்ளூர் போலீசாரில் சிலருக்கும் கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து தனியாக போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், இதுபோன்ற குழறுபடிகள் இருந்திருப்பின் அதை சரி செய்துவிட்டே அடுத்த முறை ஆபத்தான கொள்ளையர்களை நெருங்க வேண்டும், என்பதே காவல்துறையினர் மட்டுமின்றி தமிழக மக்களின் எதிர்பார்ப்புமாகும்.