ராமமோகன ராவ் மீண்டும் அரசு பதவிக்கு வந்ததன் பின்னணி என்ன?
சென்னை: வருமானவரி சோதனையைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவுக்கு 3 மாத காலத் துக்குள் மீண்டும் பதவி அளிக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், முதல்வரின் செயலராக 2011 முதல் இருந்தவர் பி.ராமமோகன ராவ். 2016ல் மீண்டும் ஜெய லலிதா முதல்வரானபோது, தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஜூன் 7ம் தேதி மாற்றப்பட்டு, தமிழக தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.
வருமான வரி சோதனை
இதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் டிசம்பர் 21ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலும் சோதனை நடந்தது. இது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பதி லாக, தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார்.
புதிய பதவி
மத்திய, மாநில அரசுகள் பற்றி ராமமோகன ராவ் மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 3 மாதங் களுக்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவுக்கு நேற்று முன் தினம் இரவு புதிய பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாமர்த்தியம்
அரசுகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஒருவர் எப்படி மீண்டும் அரசு பதவிக்கு வர முடிந்தது என்பதில்தான் உள்ளது ராமமோகன ராவின் சாமர்த்தியம். இதுகுறித்து அரசு வட்டாரங்களில் கூறியதாவது: தமிழகத்தின் ஆளும் தரப்பு ஆதரவு இல்லாமல் அவர் மீண்டும் பதவியைப் பெற்றிருக்க முடியாது என்பது பெரும்பாலானோரின் கிசுகிசுப்பு.
வேறு வழியில்லை
ஆந்திராவில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒருவர் மத்திய அரசுக்கு நெருக்கமானவராம். அவரை பிடித்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணி நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருமான வரி சோதனையில் ராமமோகன ராவுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கவில்லை என்பதால் சீனியர் ஐஏஎஸ் அதிகாரியை நீண்ட நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைப்பது சரியாக இருக்காது என்பதால் வேறு வழியின்றி மத்திய அரசும் தலையாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.