இழுத்து கடிக்கும் அளவுக்கு அவ்வளவு நீளமாகவா வயர் இருந்தது... மாஜிஸ்திரேட் சரமாரி கேள்வி #ramkumar
சென்னை: ராம்குமார் மின்சார வயரைக் கடித்து இறந்தார் என்று கூறப்படுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது புழல் சிறையில் நேரில் சென்று விசாரணை நடத்திய அவர் சரமாரியாக பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மிகவும் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் தரப்பும், காவல்துறையும் கூறுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் எந்த உயர் அதிகாரியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த புழல் சிறைக்குச் சென்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட் தமிழ் செல்வி விரிவான விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு விசாரணை நடத்தினார்.
- நேற்று முற்பகல் 11.20 மணிக்கு புழல் சிறைக்கு மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வந்தார்.
- சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், துணை கண்காணிப்பாளர் குமரேசன், ஜெயிலர் ஜெயராமன் ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
- சம்பவத்தின் போது பணியில் இருந்த சிறை காவலர் பேச்சிமுத்து, சிறை மருத்துவர் நவீன் ஆகியோரையும் அவர் விசாரித்தார்.
- ராம்குமாருடன் இருந்த சிறை கைதிகள் வெங்கடேசன், இளங்கோவன் ஆகியோரையும் அவர் நேரில் அழைத்து விசாரித்தார்.
- மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன் பணியாளர்கள், ராம்குமார் இருந்த பக்கத்து அறையிலுள்ள கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- அனைவரிடமும் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி தனித் தனியாக விசாரணை நடத்தினார்.
- ராம்குமார் எப்படி இறந்தார், சம்பவத்துக்கு முன் யாருடன் அவர் பேசினார் என்பது குறித்து நீதிபதி கேட்டறந்தார்.
- கடைசியாக ராம்குமாரை யார் பார்த்தது, ஒயரை கடித்த பிறகு ராம்குமாரை முதலில் பார்த்தது யார் என்றும் நீதிபதி விசாரித்தார்.
- ஒயரைக் கடிக்கும் அளவுக்கு ராம்குமாருக்கு எப்படி மின்சார பெட்டி எட்டியது என்பது குறித்தும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
- ஒயரை இழுத்து கடிக்கும் அளவுக்கு ஒயர் அவ்வளவு நீளமாக இருந்ததா என்றும் அவர் விசாரித்தார்.
- சிறை வளாகத்தில் ஏன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவில்லை என்ற கேள்வியையும் அவர் அதிகாரிகளிடம் முன்வைத்தார்.