சசியின் மேற்கு மண்டல தளபதி ராவணன் மட்டும் ஐடி ரெய்டில் இருந்து தப்பியது எப்படி
சசிகலாவின் மேற்கு மண்டல தளபதியாக திகழ்ந்த ராவணன் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்காமல் தப்பியுள்ளார்.
Recommended Video
கோவை: சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் வீடுகளில் கூட விடாமல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் முக்கிய தளபதியாக திகழ்ந்த ராவணன் மட்டும் இந்த ரெய்டில் இருந்து தப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி வீடு, கொடநாடு எஸ்டேட் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறையினர் கோவை ராமநாதபுரத்தில் இருக்கும் ராவணனின் வீட்டுக்கு நேற்று இரவு வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை.
சசிகலாவின் மேற்கு திசை தளபதியாக இருந்தவர் ராவணன். அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளின் பார்வை இதுவரை படாதது ஏன் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
ராவணன் ராஜ்ஜியம்
மன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளைத் திருமணம் செய்திருக்கிறார். கோவையில் வசித்து வந்த ராவணன், கொங்கு மண்டல அதிமுகவில் கட்சிப் பதவி மட்டுமல்ல; கவுன்சிலரிலிருந்து எம்.பி. பதவி வரை யாருக்கு என்பதை கடந்த 2011ஆம் ஆண்டு நிர்ணயித்தவர். அவரால்தான் பலரும் எம்எல்ஏ சீட் பெற்று அமைச்சரானார்கள். அந்த அளவிற்கு பவர் சென்டராக இருந்தார்.
கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம்
2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ராவணனின் செல்வாக்கு மளமளவென கூடியது. கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த செங்கோட்டையன் செல்வாக்கு இழக்கக் காரணம் ராவணன்தான் என்று கூறப்பட்டது. கொங்கு மண்டலத்தின் பவர் சென்ட்டராக இருந்த ராவணன் மூலமாகத்தான் கொங்கு மண்டலத்தில் பலரும் போயஸ்கார்டனுக்கு நெருக்கமானார்கள்.
சிறையில் ராவணன்
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்ளிட்ட உறவினர்களை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கியபோது, ராவணன் மீதும் நில அபகரிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. ராவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் அரசியலை விட்டே ஒதுங்கினார். எங்கே இருக்கிறார் என்றே தேடி வந்தனர்.
மீண்டும் தலையெடுத்த ராவணன்
ஜெயலிதாவின் மரணத்துக்குப் பிறகு மீண்டும் கோவை பகுதியில் கரை வேட்டி கட்டிக்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சசிகலா பொதுச் செயலாளர் ஆனவுடன் மீண்டும் கொங்கு மண்டலத்தில் ராவணனின் கை ஓங்கியது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகி அவர் தினகரனுடன் முரண்பட்டதில் இருந்து ராவணன் மீண்டும் ஒதுங்க ஆரம்பித்தார்.
ஒதுங்கிய ராவணன்
இப்போது அவர் தமிழகத்தில் இல்லை என்றும் வெளிநாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. வருமானவரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் ராவணன் வீட்டிற்கு மட்டும் இதுவரை யாருமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.