போலி பத்திரிகையாளர்களாகவும் வலம் வந்த ரவுடி பினுவின் கூட்டாளிகள்!
சென்னையில் நேற்று ஒரே நேரத்தில் கொத்தாக தூக்கப்பட்ட 75 ரவுடிகளில் பலர் போலி பத்திரிக்கையாளர், வக்கீல்களுக்கான அடையாள அட்டை வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே பிரபல தாதா பினு பிறந்தநாள் கொண்டாட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய 75 ரவுடிகளை கொத்தாக தூக்கியது காவல்துறை. இந்த 75 பேரில் பலர் சட்டக்கல்லூரி மாணவர்கள், போலி நிருபர்கள், வக்கீல்களுக்கான அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள வேலு லாரி ஷெட்டில் பிரபல ரவுடி பினுவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நேற்று முன் தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரவுடி பினு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் கேரளாவில் சிகிச்சை பெற்றதாகவும் இந்த காலகட்டத்தில் ராதாகிருஷ்ணன் என்ற ரவுடி தலை தூக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே ராதாகிருஷ்ணனை ஓரம்கட்டி தனக்கு கீழான ரவுடிகள் பட்டாளத்தை குஷிப்படுத்தவே பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கத்தை விட பள்ளிக்கரணை பகுதியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் சீறிப்பாய்ந்ததையடுத்து ரோந்து போலீசார் பல்லு மதன் என்ற ரவுடியை பிடித்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது.
இதனையடுத்து மாறு வேடத்தில் ரவுடிகள் போலவே லாரி ஷெட்டிற்கு சென்ற போலீசார் 75 ரவுடிகளை மடக்கிப் பிடித்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வானவேடிக்கைகள், மாலை என அதகளப்படுத்தியதோடு பட்டாகத்தியை வைத்து பினு கேக் வெட்டும் புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைத்தன.
கொத்தாக தூக்கப்பட்ட 75 ரவுடிகள்
சம்பவ இடத்தில் 75 ரவுடிகளையும் கொத்தாக தூக்கினர் போலீசார். ஆனால் பினு, கனகு உள்ளிட்ட 3 பேர் போலீஸ் வலையில்இருந்து தப்பிவிட்டனர். இரவோடு இரவாக ரவுடிகளிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 75 பேர் மீதும் எந்தெந்த காவல்நிலையத்தில் வழக்கு இருக்கிறதோ அந்தந்த காவல்நிலைய போலீசார் அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
மாணவர்களா?
சென்னையில் ஒரே இடத்தில் ரவுடிகள் கூடி பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் தமிழக சட்டம், ஒழுங்கு இருக்கிறது என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். மற்றொரு புறம் பிடிபட்டவர்களில் பலர் 35 முதல் 30 வயதிலானவர்கள் என்றும் இவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
போலி வக்கீல்களின் அடையாள அட்டை
இதே போன்று இவர்களில் பலரிடம் போலி வக்கீல்கள், நிருபர்களுக்கான அடையாள அட்டைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வெளி மாநிலங்களில் செயல்படும் ‘லெட்டர்பேடு' சட்டக்கல்லூரிகளிடம் இருந்து எளிதாக சட்டப்படிப்புக்கான சான்றிதழை பெற்று, தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி பார் கவுன்சிலில் பதிவு செய்து, யார் வேண்டுமானாலும் வக்கீலாகி விடுகின்றனர்.
சொத்துகளை அபகரிக்கும் கூலிப்படையினர்
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், முறையான கல்வி தகுதிகள் இல்லாதவர்கள் கூட வக்கீலாக மாறி விடுகின்றனர். இவர்கள் சொத்துகளை அபகரிக்கும் கூலிப்படையினராகவும் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த வக்கீல் தொழிலுக்கே களங்கம் ஏற்படுகிறது என்ற பிரச்னை நீண்ட நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில்கள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தான் சென்னையில் பிடிபட்ட ரவுடிக் கும்பலில் சிலரிடம் பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகளில் ஆந்திர மாநில பார்கவுன்சிலிடம் வக்கீலுக்கான பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை இருந்தது.
அதிகரிக்கும் போலி நிருபர்கள்
இதே போன்று போலி நிருபருக்கான அடையாள அட்டையும் ரவுடிகளிடம் இருந்துள்ளன. 24 மணி நேரம் செய்திக்காக பணியாற்றுபவர்களுக்காக நிறுவனங்கள் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பேருக்கு ஒரு பத்திரிக்கையை தொடங்கி விட்டு அடையாள அட்டைஅடித்துக் கொண்டு திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி 10 பேர் சேர்ந்து கொண்டு ஒரு சங்கத்தை தொடங்கி அதை பதிவு செய்துவிட்டு ஏதாவது ஒரு அரசியல்வாதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்தே காலத்தை கடத்துகின்றனர்.
களைய வேண்டும்
போலி நிருபர்கள், போலி வக்கீல்களை அடையாளம் காண வசவசவென வளர்ந்து கிடக்கும் சங்கங்களை ஒழித்தாலே இந்த பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிடும். நியாயமான விஷயங்களுக்காக போராடுவதற்காகவும், பத்திரிக்கையாளர்களுக்கான உரிமைகளுக்காகவும் சங்கங்கள் உருவாக்கப்பட்டது போய் லாப நோக்குடன் சங்கம் நடத்துவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே போலிகளின் நடமாட்டத்தை குறைத்து விடலாம்.