லோக்ஆயுக்தா என்றால் என்ன? யாரையெல்லாம், எப்படியெல்லாம் விசாரிக்க முடியும்? முழு தகவல்கள்!
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள், என்ன, அந்த சட்டத்தால் உருவாக்கப்படும் லோக்ஆயுக்தா அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பது குறித்த ஒரு முழு விளக்கம்தான் இந்த கட்டுரை:
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்புதான் லோக்ஆயுக்தா என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த நால்வரில் இருவர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
*லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தேர்வு எப்படி?
முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து லோக்ஆயுக்தா உறுப்பினரை தேர்ந்தெடுப்பார்கள். தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
*யார் யாரெல்லாம் லோகாயுக்தா தலைவர் அல்லது உறுப்பினர் ஆக முடியும்?
பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி, அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது, ஊழல் தடுப்பு அல்லது பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்.
*லோக்ஆயுக்தா தலைவர் அல்லது உறுப்பினராக தகுதிகள்:
எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது
நாடாளுமன்ற அல்லது சட்டசபை உறுப்பினராக இருக்க கூடாது
அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது
வேறு எந்த ஆதாயம் தரும் பதவிகளையும் வகிக்கக் கூடாது
45 வயதிற்கு குறைவாகவோ அல்லது 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது
லோக்ஆயுக்தா உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
*லோக் ஆயுக்தா அமைப்பில் இருக்கும் பிறர் யார்?
லோக்ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் இருப்பார். அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான விசாரணை அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்பதும் விதிமுறை.
*லோக் ஆயுக்தா விசாரணை வரம்பு எப்படி?
முதல்வர், முன்னாள் முதல்வர், அமைச்சர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில அரசு ஊழியர்கள், அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் அல்லது வாரியங்கள் அல்லது சங்கங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல்களை லோக் ஆயுக்தா விசாரிக்கலாம். மேலும், பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.
*லோக்ஆயுக்தா அமைப்பின் சிறப்பு அதிகாரங்கள் என்ன?
விசாரணை தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை, விசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்தலாம், யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்க முடியும், எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரிக்கைவிடுக்க முடியும்.
*எதையெல்லாம் லோக்ஆயுக்தா விசாரிக்கக் முடியாது?
இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு
வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை விசாரிக்க முடியாது. அதேபோல, உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள், லோக் ஆயுக்தா அமைப்பு உருவாகுவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள், துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு போட்டுக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
*லோக்ஆயுக்தா விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?
விசாரணைப்பிரிவு அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும்.
*ஊழல் புகாருக்காக யார், யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?
அரசு ஊழியர்களை தமிழக அரசு, சட்டசபை உறுப்பினர் மீது சபாநாயகர், அமைச்சர்கள் மீது முதல்வர், முதல்வர் மீது எனில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.