நெல்லைக்கு வந்த சிறுத்தையை கொண்டு வந்தது சர்க்கஸ்காரர்களா அல்லது வேட்டைக்காரர்களா??
நெல்லை: நெல்லையில் இன்னும் சிறுத்தை வந்த கதை ஓயவில்லை. எப்படி வந்தது இந்த சிறுத்தை என்பதுதான் மக்களின் ஒரே சந்தேகமாக உள்ளது. காரணம், நெல்லை நகரையொட்டி பெரிய காடுகள் எதுவும் இல்லை. தூரத்தில் உள்ள களக்காடு முண்டந்துறையில்தான் புலிகள் காப்பகம் உள்ளது. எனவே அங்கிருந்து வந்திருக்கலாமா என்ற சந்தேகம் உள்ளது. அதேசமயம், ஏதாவது சர்க்கஸ் நிறுவனம் இந்த சிறுத்தையை கொண்டு வந்திருக்கலாம், அது தப்பியிருக்கலாம் என்ற புதிய சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனிக்கு அடுத்துள்ளது திருமால் நகர். இது நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிலர் சிறுத்தை ஒன்றைப் பார்த்து போலீஸாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் சிறுத்தையைப் பிடிக்கும் படலம் தொடங்கியது.
குடியிருப்புகளுக்குள் ஓடிய சிறுத்தை வீடு வீடாக ஓடி போக்கு காட்டி நெல்லை மாநகரையே பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டது. சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தினர். இதன் வயது 3 ஆகும். தற்போது இந்த சிறுத்தையை களக்காட்டுக்குக் கொண்டு போய் காட்டின் உட்பகுதியில் விட்டு விட்டனர் வனத்துறையினர்.
இந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பது பெரும் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து இது வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. களக்காடு, உள்ளிட்ட சில வனப்பகுதியிலிருந்து இது வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவையெல்லாம் நெல்லையிலிருந்து வெகு தொலைவில் பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவை. எனவே எப்படி இவ்வளவு தூரத்தைசிறுத்தை கடந்து வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருந்தால் வழியில் நிச்சயம் மக்கள் கண்ணில் பட்டிருக்கும், பல ஆடு, மாடுகளை அது கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அப்படி எதுவுமே எங்குமே நடக்கவில்லை. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் அணைப் பகுதிகளிலும் தண்ணீராக உள்ளது. எனவே அதை கடந்து சிறுத்தை வந்தது என்றால் நம்பும்படியாக இல்லையே என்பது நெல்லை மக்களின் கருத்தாகும்.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகங்களில் தான் சிறுத்தைகள் ஏராளமாக உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவாரத்தில் தஞ்சம் புகுந்துள்ளன. சிறுத்தையும் அவ்வாறு இடம் பெயர்ந்து மலையடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்திருக்கலாம். இதை நோட்டமிட்ட வேட்டை கும்பல் அல்லது சர்க்கஸ் கும்பல் ஏதாவது, சிறுத்தையை வாகனங்களில் கடத்தி வந்திருக்கலாம். நெல்லை அருகே வரும்போது ஏதாவது நெருக்கடி ஏற்பட்டு இனி கொண்டு செல்ல வழியில்லை என்ற நிலையில் சிறுத்தையை வாகனத்திலிருந்து திறந்து விட்டு விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேககப்படுகிறார்கள்.
சிறுத்தைகள் பொதுவாக ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்லக் கூடிய வழக்கம் கொண்டவைதான். எனவே காட்டுப் பகுதியிலிருந்து அது வந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பலர் நம்புகிறார்கள். ஆனால் சிறுத்தைகளுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். குரங்குகளையும் அது விரும்பிச் சாப்பிடும். எனவே காட்டிலிருந்து வந்த சிறுத்தையாக இருந்தால் வழியில் இதையெல்லாம் அது காலி செய்திருக்கும். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்பதால்தான் மக்களுக்கு இப்படி ஒரு புது சந்தேகம் வந்துள்ளது.
வனத்துறையினர்தான் விளக்க வேண்டும்!