ஆராய்ச்சி மாணவியை லத்தியால் அடித்த போலீசார்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது மனித உரிமை ஆணையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவியை லத்தியால் போலீசார் அடித்து துன்புறுத்தினார்கள். இதுதொடர்பான விசாரணையை தானாக முன்வந்து ஏற்றது மனித உரிமை ஆணையம்.
சென்னை: பெங்களூர் ஆராய்ச்சி மாணவி அன்னபூர்ணா போலீசாரால் தாக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை செய்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆராய்ச்சி மாணவி அன்னபூர்ணா. அவரை தகாத வார்த்தைகளில் பேசி, லத்தியால் அடித்து போலீசார் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, அப்போது, கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு மையத்தை தொடக்கி வைக்க வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் அன்னபூர்ணா புகார் மனு கொடுத்து போலீசார் நடந்து கொண்ட விதத்தை எடுத்துரைத்தார்.
பின்னர், செய்தியாளர்களையும் அவர் சந்தித்து தனக்கு நேர்ந்த அநீதியை படம் படித்துக் காட்டினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன.
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது. ஆராய்ச்சி மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக 8 வாராத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று போலீஸ் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமை ஆணையம்.
மேலும், இந்தப் புகாரை உதவி ஆணையர் தலைமையில் விசாரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.