யாருடன் போன் பேச்சு?.. கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பிய கணவர்
சிதம்பரம்: அடிக்கடி யாருடன் செல்போனில் பேசுகிறீர்கள் என்று கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார் ஒரு கணவர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் ஜெயங்கொண்டம் நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (47). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் நவநீதம் (40). செந்தில்குமாருக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனை பார்த்த அவரது மனைவி நவநீதம், உங்களுக்கு அடிக்கடி போன் வருகிறது. யார் பேசுகிறார்கள் என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் திங்கள்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த கணவர் செந்தில்குமார், மனைவி நவநீதத்தின் இடது காதை பிடித்து கடித்து துப்பிவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். காதில் ரத்தம் வடிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட நவநீதத்தை அருகாமையில் இருந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு நவநீதம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.