அதிதீவிரமாகும் ‘ஹூட் ஹூட்’ புயல்.. விசாகப்பட்டினம் அருகே நாளை மறுநாள் காலை கரையை கடக்கிறது
சென்னை: அந்தமான் கடற்பரப்பில் தீவிரம் அடைந்த ஹூட் ஹூட் புயல் இன்று மேலும் வலுப்பெற்று அதிதீவிரமடைகிறது. இந்த புயல் நாளை மறுநாள் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடக்கிறது.
அந்தமான் அருகே உருவான புயலுக்கு ஹூட் ஹூட் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஓமன் நாட்டின் மரங்கொத்தி பறவையான ஹூட் ஹூட் என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு தென் கிழக்கில் 670 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதுபோல ஒடிஷாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கிலும் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் தீவிரம் அடைந்துள்ளது. அது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்தில் அதி தீவிரம் அடைகிறது. இப்புயல் நாளை மறுநாள் பிற்பகல் கரையை கடப்பதாக இருந்தது. ஆனால் அது 12-ந்தேதி காலையிலேயே விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது அந்த பகுதியில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
இந்த புயலுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.