நெல்லையில் மலிவு விலை ‘அம்மா’ ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அலைமோதிய பெண்கள் கூட்டம்
நெல்லையில் மலிவு விலை ‘அம்மா’ ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
Recommended Video
நெல்லை : 'அம்மா' ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க கடைசி நாளில் பெண்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் திணறினர்.
வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஸ்கூட்டர் வாங்க கடந்த 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
வேலைக்குச் செல்லும் மகளிரில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருப்போர் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி பெண்கள் கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் பெண்கள் அதிக அளவில் விண்ணப்பம் அளித்து வந்தனர்.
இந்நிலையில், மானிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பம் அளிக்க நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்ததால், பலர் கடைசி நாளில் முட்டி மோதினர். நெல்லை மாநகராட்சியில் பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் அலுவலகத்தில் பலர் இரவு வரை வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.
இவர்களில் வேலைக்குச் செல்லும் மகளிரில், தகுதியானவர்களுக்கு இருச்சக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தை வரும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.