வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விஐபிகளுக்கே முன்னுரிமை… பொதுமக்கள் காத்திருப்பு
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஏழுமலையானைக் காண விஐபிக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதால் சாதாரண பொதுமக்கள் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருக்க நேரிட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியும், நாளை துவாதசி விழாவும் கொண்டாடப்படுகிறது. விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்றே திருமலையில் குவிந்தனர்.
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 2 நாட்களுக்கும் தரிசனத்துக்கு 40 ஆயிரம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்படடது.
ஏகாதசி தரிசன டிக்கெட் விநியோகம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பெறுவதில் பக்தர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கோவில் ஊழியர்கள் வரிசையை ஒழுங்குபடுத்த முயன்றும் முடியவில்லை.
பொதுமக்கள் போராட்டம்
அலிபிரி பாதையில் நடைபயணமாக வந்தவர்கள் வரிசையில் இடம் பிடிக்க காட்டுப்பாதையில் குறுக்கு வழியாக ஓடி வந்தனர். ஆனால் மதியம் 2 மணிக்கு டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது.
ஞாயிறன்று நடக்கும் துவாதசி தரிசனத்துக்கு டிக்கெட் விநியோகம் மாலை 4 மணிக்கு முடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஆங்காங்கே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சாலை மறியல்
அலிபிரி டி.டி.சி. என்ற இடத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
10000 விஐபிக்கள்
இதற்கிடையே ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை மாலையே வி.ஐ.பி.க்களும் குவிந்தனர். 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், 200-க்கும் மேற்பட்ட மத்திய-மாநில உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என வி.ஐ.பி.க்கள் குவிந்தனர். வி.ஐ.பி.க்களுக்கு 10 ஆயிரம் பாஸ்கள் விநியோகிக்கப்பட்டது.
பொதுமக்கள் காத்திருப்பு
இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி வரை வி.ஐ.பி.க்கள் தரிசனம் முடியவில்லை.
இதனால் சாதாரண பக்தர்கள் தரிசன கியூ நகரவே இல்லை. முதல் நாளில் இருந்து வரிசையில் காத்து இருந்தும் தரிசனம் தாமதமானதால் பொறுமை இழந்த அவர்கள் தேவஸ்தானத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
பக்தர்கள் கோபம்
சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை என்று தேவஸ்தானம் அறிவித்து இருந்த போதிலும் வி.ஐ.பிகளுக்கே முன்னுரிமை வழங்கபட்டதால் பக்தர்கள் கோபத்தில் இருந்தனர். இதே போல் வி.ஜ.பி.க்களும் தங்களுக்கு அதிகாரிகள் மரியாதை அளிக்கவில்லை என்று கோபப்பட்டனர். இரு தரப்பினரை சமாளிக்க முடியாமல் தேவஸ்தானம் அதிகாரிகள் திணறினர்.