பெரிய ட்விஸ்ட்! "யாரும் கடத்தல.." பெற்றோர் கடத்தியதாக வீடியோ பரவிய நிலையில்.. பெண் பரபர வாக்குமூலம்
தென்காசியில் பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் இப்போது புதிய வீடியோ வெளியாகி ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள இலஞ்சி அடுத்துள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன். வெளிநாட்டில் பணிபுரிந்த மாரியப்பன் இப்போது நாடு திரும்பி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்..
இவரது மகன் வினித் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் பட்டேல். குஜராத்தைச் சேர்ந்த நவீன் படேல், கடந்த 20 ஆண்டுகளாகத் தென்காசியில் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
"என்ன தைரியம் இருந்தா.. எங்க பொண்ணை கட்டுவா!" வீடு புகுந்து மணமகன் முன் பெண் வீட்டார் செய்த கொடூரம்
தென்காசி
இவரது மகள் கிருத்திகாவும் வினித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்ததாக கூறப்படுகிறது. அப்போது முதலே ஒருவருக்கு ஒருவர் பிடித்த நிலையில், அது பின்னாட்களில் காதலாகவும் மாறியுள்ளது.. இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி இந்த ஜோடி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இதைப் பதிவும் செய்துள்ளனர். இருப்பினும், பெண் வீட்டாரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, அதற்கு அஞ்சி இவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இருவரும் கடந்த ஒரு மாதமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், பொங்கல் விழாவுக்குக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
கடத்தல்
அப்போது இவர்கள் சென்ற காரை வழிமறித்த பெண் வீட்டார் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக வினித் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் வினித்- கிருத்திகா தம்பதி இருந்துள்ளனர். அப்போது பெண்ணின் வீட்டார் சில அடியாட்களுடன் அங்கு வந்துள்ளனர். அங்கிருந்த கிருத்திகாவைத் தாக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். மேலும், அங்கிருந்த கார் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
வீடியோ
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் போலீசாரிடம் வினித் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டி.ஜி.பி சைலேந்திரபாபு வரை சென்றது. சமீபத்தில் மணப்பெண் கடத்தப்பட்ட வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், அந்தக் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவுசெய்யாதது தவறானது என்று சைலேந்திரபாபு அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் மணப்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
ட்விஸ்ட்
இதற்கிடையே இதில் புதிய திருப்பமாக, கிருத்திகாவுக்கு ஏற்கெனவே உறவினருடன் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும் அதற்கான ஆதாரத்தையும் அவரது தந்தை நவீன் பட்டேல் மாவட்ட எஸ்.பி சாம்சனிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கிருத்திகா பேசும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
யாரும் கடத்தவில்லை
அந்த வீடியோவில்," என்னுடைய பெயர் கிருத்திகா பட்டெல்.. நான் நன்றாகவும் பாதுகாப்பாகவும் தான் உள்ளேன். ஏற்கனவே எனக்கு மைத்தீரிக் பட்டேலுடன் திருமணம் நடந்துள்ளது. நான் இப்போது அவருடனும், எனது பெற்றோருடனும் தான் இருக்கிறேன். நலமாகவே உள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.. டார்ச்சர் செய்யவில்லை.. இது குறித்து என்னால் அங்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது வேண்டாம், இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். இந்த விஷயத்தில் யாருக்கும் சம்பந்தமில்லை. என்ன நடந்ததோ அது எனது விருப்பப்படியே நடந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பு
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மணப்பெண்ணைக் கடத்தியதாக இணையத்தில் வீடியோ பரவிய நிலையில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், அந்த பெண் சார்பில் எஸிபிக்கு அனுப்பப்பட்ட மனுவில் ஏற்கனவே மைத்தீரிக் பட்டேலுடன் திருமணமானது குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது.