டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகளும் இறந்தது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி
சென்னை: டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகளும் உயிரிழந்தது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் இருந்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானம் இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென மாயமானது.
அதனைத் தொடர்ந்து மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் தமிழக மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலில் டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது. விமானப் பாகங்கள் கிடைத்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில், ஜூலை 11ம் தேதி 3 உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
அந்த உடல் பகுதிகள் டி.என்.ஏ. ஆய்வுக்காக அனுப்பப் பட்டது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மீட்கப்பட்ட 3 உடல் பகுதிகளில் டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையது தான் என்பது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா கூறுகையில், ''கடலில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ சோதனையில், டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி மாலை சென்னையில் மூன்று விமானிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்'' என்றார்.
மேலும், கருப்பு பெட்டி ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளும் விரைவில் தங்களுக்கு கிடைக்கும் என்றும் சர்மா கூறியுள்ளார்.