பி.ஆர்.பி. குவாரியில் நரிக்குறவர் நரபலியா?... மனைவி புகாரால் பரபரப்பு
மதுரை: பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் தனது கணவரை நரபலி கொடுத்திருக்கலாம் என நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அடுத்த மாதம் தனது விசாரணை அறிக்கையை அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்.
இதற்கிடையே, பிஆர்பி கிரானைட் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்ட சிலரை நரபலி கொடுத்ததாக அதில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் சகாயத்திடம் புகார் மனு அளித்தார்.
அதனடிப்படையில் மேலூர் அருகே சின்னமலம்பட்டி இடுகாட்டில் சேவற்கொடியான் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டும் பணி நடைபெற்றது. அங்கு 8 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அவை நரபலி கொடுக்கப்பட்டவர்களுடையதா அல்லது உள்ளூர் மக்கள் புதைத்த சடலங்களுக்குரியதா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கல்வெட்டிமேடு நரிக்குறவர் காலனியில் வாழும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ரவி (45) மூலிகை தைலங்களை ஊர், ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு வியாபாரத்திற்காக சென்ற அவர் பின்னர் திரும்பவில்லை.
அப்போது நத்தம் போலீசார் ரவியின் மோட்டார் சைக்கிள், மருந்து பெட்டி ஆகியவை போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும், அதனை பெற்று கொள்ளுமாறும் தெரிவித்தனர். ஆனால் எனது கணவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. கணவர் மாயமானது தொடர்பாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தேன். அவரது உத்தரவின்பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இது வரை எனது கணவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மேலூர் கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. எனது கணவர் அடிக்கடி மேலூர் பகுதியில் மருந்து விற்க செல்வார். இதில் எனது கணவரையும் குவாரியை சேர்ந்தவர்கள் நரபலி கொடுத்திருக்க வாய்ப்புள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த புகாரால் கிரானைட் வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதுவரை நரபலி கொடுக்கப்பட்டவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தவிர வேறு ஏதும் அடையாளங்கள் தெரியாமல் போலீசார் திணறி வந்தது குறிப்பிடத்தக்கது.