பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் பெண் நரபலியா? மண்டை ஓடு. எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
மதுரை: மேலூர் அருகே பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறார். 20 கட்ட விசாரணை நடத்தியுள்ள சகாயம் வரும் 15ம் தேதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக வந்த புகாரின்பேரில் மேலூரை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடைப்பகுதியில் தோண்டிய போது 8 எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் சிக்கின. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சின்ன மலம்பட்டியை சேர்ந்த வீரம்மாள் என்பவர் நேற்று சகாயத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், எனது தாயார் அன்னக்கொடி, 80, 2010 ம் ஆண்டு மேலூர் செல்வதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
2012ம் ஆண்டு பி.ஆர்.பி. கிரானைட் குவாரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளில் எனது தாயின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய சில பொருட்கள் இருந்தது. எனவே எனது தாய் அன்னக்கொடியை நரபலி கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து சகாயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்குமாறு வீரம்மாளை அறிவுறுத்தினார். இதையடுத்து அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
அவரது உத்தரவின்பேரில் மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் வீரம்மாள் குறிப்பிட்ட சின்னமலம்பட்டி பகுதியில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரி அருகில் மணியன் பொட்டக்குளம் பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு முட்செடிகள் நிறைந்த பகுதியில் மண்டை ஓடு, எலும்புகள் சிதறி கிடந்தன. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.